Pages

Thursday, March 31, 2011

வெப்பத்தில் வளரும் விதைகள்

தாய்க் குழல்ப் பிட்டு
ரூபாய்கள்

வெளிநாட்டு பணிப்பெண்ணின்
வியர்வைகள்

வலைகளில் சிக்கும் மீன்களில்
நிரப்பிக்கொள்ளும்
உண்டியல்கள்

பாட்டு, பட இறுவட்டுகளில்
சில்லறைகள்

தந்தை அகற்றும் - நகரத்
திண்மக்கழிவுகள்

கதிரை மேசை செய்யும்
மரக்குற்றிகள்

சாமிக்கு பூசைசெய்யும்
பூக்கள்

துணிகளை வெட்டி
கலையாக்கும்
தையல்கள்

மரக்கறிகளை தேடிவாங்கி
கடைகளுக்கு கொடுக்கும்
கால்கள்

நிறுவக கதவு திறந்து
காவல்காக்கும்
கால்கள்

செங்கல்களை அடுக்கி
கையைச் சுட்டுக்கொள்ளும்
சீமெந்துகள்

புகையிரத தண்டவாளத்தின்
பழுதுபார்க்கும் சிலிர்ப்பர்
கட்டைகள்

அத்தனை கண்ணீரின்
தொப்புள் கொடிகளில்
படிக்கும் எனது
பள்ளி மாணவர்கள்
வெப்பத்தில் வளரும்
விதைகள்

ஒவ்வொருநாளாய்
இறந்துகொண்டு
நான்..

Sunday, March 27, 2011

அன்பில் ஆரத்தழுவலும் நம்பிக்கையும்

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது யாவரும் உணரக்கூடியதாக இருக்கும். வாழ்க்கை என்பது நாம் வாழும் போதுதான் இரு(னி)க்கும். நமது வாழ்க்கையின் ஏதோ ஒரு இடத்தில் உயிரோட்டம் என்ற சொல்லால் நிரப்பும் மூச்சுக்காற்றில் நம்பிக்கை மிதந்துகொண்டுதான் இருக்கும்.
இருந்தாலும் "நம்ப நட நம்பி நடவாதே" என்றும் சொல்லுவர்.
நாம் வாழும் சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதரையும் நம்புவதுதான் நல்லது என்று கருதும் போதே அதுவே நமக்கு வில்லனாக அமைவதும் உண்டு. ஆனாலும் நிம்மதியான வாழ்க்கைக்கு துணைநிக்கும் இந்த மந்திரச்சொல் "நம்பிக்கை".

பரஸ்பர துணையான வாழ்க்கை, அதாவது அது காதலாக இருக்கலாம், அது நட்பாக இருக்கலாம், ஏன் தாம்பத்திய குடும்ப உறவாக இருக்கலாம். இதைவிட நாம் பேசிகொள்ளும் யாரோ ஒரு நபரோடு இருக்கும் இனம்புரியா நல்லுறவாக இருக்கலாம். அத்தனை உறவுகளிலும் தித்திக்கும் நினைவுகளைப் பகிர்வதற்கு நம்பிக்கை அவசியம் தேவை.

வாழ்க்கையின் நம்பிக்கை பிழையாகும் தருணம் அவநம்பிக்கையாகிறது. அதாவது நமது சிந்தனையின் நடுவுநிலமையிலிருந்து சிந்திக்கத் தவறி, ஒரு குழப்ப மனதுடன் சிக்கல் உணர்வுடன் தீடீரென எடுக்கப்படும் முடிவுகள் இந்த நம்பிக்கையின் எதிரியாகின்றன. நாம் எப்பொழுதும் நமக்கு சார்பாக நமது எண்ணத்தோடு மட்டுமே சிந்தித்து ஒருதலைப்பட்சமாய், வாழ்க்கையின் நம்பிக்கையை இழந்து மற்றவர்கள் மீது சரியான நல்ல அபிப்பிராயத்தை விடுத்து நமது பார்வையில் நடைமுறைகளை எடைபோட்டுகொள்வது தவறான செயலாக அமைகிறது.

ஒருவரைப்பற்றிய முழுமையாக நமக்கு விளங்கிக்கொள்ள நிச்சயம் முடியாது. ஒருவருடன் பழகும் போது அவரது அந்த பழகும் தருணத்தில் அவரது நிலமையை புரிந்கொள்வதால் அவரை முழுமையாக அறிந்துகொண்டோம் என்ற எண்ணத்தில் நாம் இருப்பது இயல்பு. மாறாக அவர்கள் பற்றிய முழு விபரங்கள் தெளிவாக்கப்படுவதில்ல. அத்தோடு நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று சிந்திப்பது நமது பிழைகளில் ஒன்று.

இருந்தபோதும் மற்றவர்கள் கஸ்டப்படும் போதும், கண்ணீரின் காயத்தை உணர்கின்றபோதும் கட்டாயம் ஒரு உறவு நம்பக்கையோடு தேவையாகிறது. நமது வேதனையை துடைக்கும் யாரோ ஒருவருடைய விரல்களாய் இருக்கும் உணர்வுகள் நமக்கும் வேண்டும் மற்றவர்களுக்காக. ஆனால் அந்த உறவு வாழ்நாள் வரைக்கும் துணையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். அன்பில் ஆரத்தழுவும் எல்லை மீறாத அந்த உணர்வின் விரல்களுக்கு எப்போதும் சரண். உள உணர்வோடு உரசும் அன்பு வார்த்தைகள் போதும். வாழ்க்கை அர்த்தப்படும்.

பேசுவதற்கு காசுகொடுப்பதில்லை ஆக இருக்கும் போது, நல்வார்த்தைகளால் அன்பொழுகும் அந்த கண்களுக்கு எப்போதும் நன்றி சொல்லும் மனது இருக்கும் இல்லையா. என்னைப் பொறுத்தவரையில் எதிர்ப்பால்ய நண்பர்கள் இந்த உறவுகளை கட்டிக்காத்துக் கொள்ள கஸ்டப்படுவார்கள். அதாவது ஒரு ஆணுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காய் இரங்கும் ஒரு பெண்ணையோ அல்லது மறுதலையாக ஒர் ஆண்ணையோ சந்தேகப் பேர்வழியாய் சமுதாயம் பார்க்கும் போதுதான் இந்த வாழ்க்கை வேண்டாவெறுப்பாகும். இதற்கு கலாசாரம், சமயம், நமது வாழ்க்கைப்பாங்கு போன்ற பல விடங்கள் இடியப்பச் சிக்கலாகிறது.
இது நமது கலாசாரத்தில் இருக்கும் ஒரு தவறான சிந்தனை என்று தோன்றுமளவுக்கு உண்மைச்சம்பவங்கள் சான்று பகர்க்கின்றன.
நாம் எப்பொழுதும் இயல்பாக சிந்திப்போமானால் நம்பிக்கையான வாழ்க்கை தித்திக்கும் அளவாக.



இந்தக்கவிதையும் நம்பிக்கையின் வெளிப்பாட்டில் உருவாகிய பழைய சிதறல்.

போய் வா

சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன் - உன்னுடன்
போன் பண்ணி கதைக்கும் போது
உள்ளத்தின் கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன் .......

உன்னைப் பிரியப்போகிறேன் என்ற
எண்ணத்தைக்கண்டு
இதையத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது
கனவுகளை நச்சரித்துக்கொண்டு ............
நினைவுகளை சுமந்துகொண்டு

இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்ல
ஆறுதல் சொல்ல எனக்கு.........

Wednesday, March 23, 2011

இளமையில் கொடிது வறுமை

ஒருவாறு மீண்டு(ம்) வந்திருக்கிறேன். கழுத்துவலியும் வாழ்க்கை வலியும் நெம்புகோலை எனக்குள்ளே தொலைத்து விட்டு கண்டுபிடித்து வந்திருக்கிறேன்.
கணணித் திரைப்பக்கம் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறேன். கீழ் காணும் செய்தி என்னை இப்பதிவை எழுதத்தூண்டியது.
நன்றி battinews, இதுதான் தலைப்பு
கிழக்கு மாகாணத்தில் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள்

இந்த செய்தி எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்பது கருத்துக் கணிப்பாக இருக்கலாம்
ஆயினும் இந்நிலைமை நமது மக்களுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் எதிர்காகல நமது நாட்டுப்பொருளாதாரத்துக்கும் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
வறுமை என்ற தோரணையில் பொதுவாக பிள்ளைகள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து வாழ்க்கையை எவ்வாறு கொண்டுசெல்லவேண்டும் என்ற முனைப்பில் தாங்கள் வருமானம் ஈட்டும் தொழில்களைத்தேடி தங்கள் கல்வி மற்றும் கற்றல் முயற்சிகளிலிருந்து நழுவிப்போவது கண்கூடாக தெரியும் உண்மை.
எனது பாடசாலையில் பந்தாந் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை அடிக்கடி அவதானித்தேன் நான் அவர்களுக்கு பாடம் எடுப்பதில்லை, இருந்தாலும் அவன் நடவடிக்கைகள் இவனும் பொருளாதார தேவை உள்ள மாணவனாக இருப்பான் என நினைத்து அவனை அணுகினேன். அவன்

"எனது அப்பா போர்ச்சூழலில் எனக்கு சின்னவயசாக இருக்கும்போது ஆமிகாரக்காரக்களால் கொல்லப்பட்டுவிட்டார். எனக்கு ஒரு தங்கச்சி மட்டும் அம்மாவோடு மாங்கேணியில் (வாகரை பிரதேசம்)வசிக்கிறார்.நான் இங்கு விடுதியில் (hostel) தங்கியிருந்து ஆறாந்தரத்திலிருந்து படித்துவருகிறேன். காசு அம்மா தருவா லீவுக்கு கூட்டிக்கொண்டு போவாவு. நான் காசு கொண்டுவார இல்ல அதால தான் கன்டீன்ல(Canteen)சாப்பிடுற இல்ல"

எனக்கு குபுக்கென்று அழவேண்டும் போல இருந்தது. பின்னர் அவனது கடந்தகால பாடங்களில் எடுத்த புள்ளிகளையும் மேலும் சில தேவைகளையும் கேட்டறிந்துகொண்டேன்.அவன் 45- 60 வரையில் அவனது புள்ளிகள் இருந்தன. ஆனாலும் அந்த இலவச பாதிரியாரின் விடுதியில் படித்து வளரும் அந்தபிள்ளையிடம் கேட்ட சில கேள்விகளுக்கு அவன்:

"எத்தனை நாளைக்கு சேர் பாதர்(பாதிரியார்) பார்ப்பார். நான் படிச்சு என்தங்கச்சியை பார்க்கணும். அம்மாவோடு இருந்து உழைச்சுக்கொடுக்கணும்"
என்றதும் போதும் இந்த பிள்ளையின் ஏக்கமும் வாழ்க்கைக்கோலமும்.

வாழ்க்கையின் இளைமையில் வறுமை ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் பிள்ளைகள் தங்கள் படிப்பை நிறுத்திக்கொண்டு உழைக்கவேண்டும் என்ற எண்ணம் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. யாரவாது படிக்கக்கூடிய பிள்ளைக்கு அதன் பொருளாதார நிலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றால் அவற்றில் சிறிதளவேனும் நிவர்த்தி செய்து அப்பிள்ளைகளை படிக்கச்செய்து அவர்களுக்கு ஒரு முன்னேற்றப்பாதை காட்டி அவர்களை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தையும் வாழவைப்பது கடவுளுக்குசெய்யும் தொண்டாக இருக்கும் அல்லவா.
நமது நாளாந்த செலவில் சிறுதொகைப் பணத்தை இவர்களுக்காகவாவது கொடுத்துதவும் போது அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றும் தீபங்களாக இருக்கலாம்.

அதற்காக அவர்கள் நமக்கு மீண்டும் உதவவேண்டும் நாங்கள் சொல்லும் வேலைகளைச் செய்யவேண்டும் என்றில்லாமல் உதவிதேவைப்படும் போது அவர்களுக்கு உதவிசெய்து அவர்கள் சந்திக்கும் வேறொரு பொருளாதார தேவைப்படும் பிள்ளைக்கு உதவச் செய்ய வைத்து நிலைத்து நிற்கச் செய்தல் காலத்தால் அழியாத சேவை. கடவுள் பார்வை அது அல்லவா.
பொருளாதார தேவையுள்ள பிள்ளைகள் அனேகம் பேர் இருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் வயிற்றை நிரப்பிக்கொண்டால் போதும் என்ற நிலைமையும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பிள்ளையால் எவ்வாறு படிக்கமுடியும் படிப்பு பற்றி எவ்வாறு சிந்திக்கமுடியும்.????


எங்களால் எல்லாப் பிள்ளைகளுக்கும் உதவமுடியாது ஆனால் ஒரு பிள்ளைக்காவது உதவலாம் இல்லையா. அப்பிள்ளையும் பொருளாதார தேவை இப்பொழுது இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் அப்பிள்ளையே மற்றவருக்கும் உதவும் பிள்ளையாக இருக்ககூடியதாக இருக்கலாம் தானே. எதையும் எதிர்மறை எண்ணத்தோடு பார்க்காமல் பிள்ளைநலச் சிந்தனையோடு அவர்கள் கல்வி, எதிர்கால வாழ்க்கை பற்றி சிந்திப்போமானால் கண்களின் ஓரத்தில் இதயத்தின் ஆழத்தில் சில ஈரவிழுதுகள் நெஞ்சனை நனைத்துக் கொள்ளும்.

இதற்காக தற்பொழுது எங்கள் கிராமத்தை சேர்ந்து புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் எங்களது பொருளாதாரதேவையுள்ள பிள்ளைகளுக்கு உதவிக்கொண்டு வருகிறார்கள். நன்றிகள் உறவுகளே.
இதில் கனடா வாழ் நமது "இராஜேந்திரம் ராஜன்" அண்ணா அவர்களின் முயற்சியால் கடந்தவருடம் பெப்பிரவரி 2010 இல் ஆரம்பிக்கப்பிக்கப்ட்ட பணவுதவித்திட்டம் ஒருவருடம் கடந்து பிள்ளைகளின் கல்வி வாழ்க்கைக்கு உதவிக்கொண்டிருக்கிறது.இதில் கடந்த வருட க.பொ.த. சாதாரண தரத்தில் இத்திட்டத்துக்குள் உள்வாங்கிய மாணவன் திறமையாக சித்தியெய்தி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.
இதேபோல் இன்னும் பல நமது உறவுகள் உதவுவதற்கு காத்திருக்கிறார்கள் என்பது சந்தோசம்.

பிள்ளைகள் தங்கள் பொருளாதார நிலைமை குறைவு என்பதால் மற்றவர்களிடம் கைநீட்டிக்கொள்ள மாட்டார்கள். கேட்கவே அச்சப்படுவார்கள். தங்களுக்குள்ளே அழுது பெற்றோரை கஸ்டப்படுத்தி படிப்பை தொடரமுடியாமல் இடைவிலகி தொழிலுக்கு செல்ல சிந்திப்பார்கள். இந்நிலைமையே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
இதனால் நீங்கள் யாருக்காவது பணஉதவி செய்யும் போது, செய்யப்படும் இந்த உதவி பிள்ளைகளின் மனம் பாதிக்கப்படாமல், அவர்கள் உளரீதியாக ஒரு கல்வி ஊக்கப்படுத்தலுக்கு மாத்திரம் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் யாராவது யாருக்கூடாகவாவது உதவுங்கள் ஆனால் சரியான தேவை தேவைப்படும் பிள்ளைகளை இனங்கண்டு அவர்கள் வாழ்க்கைக்கு உன்னத ஒத்துழைப்பு நல்குங்கள். கடவுளின் கருணையும் எல்லா ஆசிர்வாதமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
பிள்ளைகளின் கல்வி சமுதாயத்தின் வெளிச்சம். அதுவே நமக்கு விடிவு.

Friday, March 4, 2011

கழுத்தென்பு நெருசலும் அவதியுறுகையும்


அண்மைக்காலமாக கழுத்துவலியினாலும் மற்றும் முதுகுவலியினாலும் அவதிப்பட்டுவருகிறேன். இதனால் கணணிப்பாவனையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். அதிகூடியளவு உந்துருளி(motor bike)ஓட்டமும், நான் முன்னர் எனது நிறுவனம் வழங்கிய நெட்புக்(Netbook)இல் அதிக பாவனையும் அதற்குரிய சரியான நிலையமைப்பு இல்லாததாலும் எனது கழுத்தென்பு பகுதியிலும் அதனோடு தொடர்புபட்ட நரம்பு செல்லும் கைகளிலும் அதிக வலி ஏற்பட்டு அவதிப்படுகிறேன்.
இது சாதாரண கழுத்தென்பு X கதிர்ப்படம்.

கழுத்தென்பு தோற்றம்

இதில் C1 தொடக்கம் C7 வரையாக ஏழு கழுத்தென்புகள் இருக்கின்றன.

எனக்கு அதிகளவு வலி ஏற்படும் இடம் இந்தப்பகுதி.
இதனால் எனது முன்னவயமான எனது இடக்கைப்பகுதியும் அதிக வலியைஏற்படுத்துகிறது.

எனது கழுத்துப்பகுதி X கதிர் ஒளிப்படம்

இதனால் இப்பொழுது உந்துருளி ஓட்டத்தையும் கணணிப்பாவனையையும் குறைத்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன். எத்தனையோ காரியங்களையும் தவிர்க்கிறேன். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம் என்று அடிக்கடி சிறுபராயத்தில் ஒரு ஆசிரியர் என்னை வற்புத்துவார் உடம்பைப் பாத்துக்கொள் என்று. இப்பதான் உணர்கிறேன்.
உடல் உள உறுதி குறைந்திருக்கிறேன். மீண்டும் வருவேன் என்பது இப்பொழுதுகளில் எனது மகுட வாசகமாகிறது.


வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு