Pages

Friday, December 31, 2010

சிதறும் சில்லறைகள் - 10 (திரும்பிப்பார்க்கிறேன்)

வருட ஆரம்பம்:
விடைபெறும் ஆண்டுக்காக சென்ற வருட இறுதி இடுகைக்கவிதை போ 2009 வா 2010
......
கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல
வா
புது வருடமே...
உன்னை விட
எனக்குத் தெம்பு
இருக்கிறது
இருந்தாலும்
உன் வரவு நல்வரவாகட்டும்

மனதுக்கு வெள்ளையடித்து
உன்னை வரவேற்போம்

கண்களில் விளக்கேற்றி
உன்னை
வெளிச்சப்படுத்துவோம்
...........

பதிவுலகில் இக்கவிதையே ஒரு வெற்றியானது. பின்பு தொடர்ந்து தொடர் பதிவுகளினால் 2010 ஆம் ஆண்டு மட்டுமே நூறு இடுகைகளை தாண்டக்கூடியதானது(இப்பதிவுடன் 106 இடுகைகள்)பதிவுலக திருப்தியாக கருதுகிறேன். அதற்காக கஸ்டப்பட்டு , மனம்கவர்ந்து, பிடித்து பிடிக்காமல் வாசித்து பின்னூட்டி எதை எதையோ எல்லாம் சாதிக்க(??) உறுதுணையான அனைவருக்கும் நன்றி. தொடர்ந்திருங்கள். இப்பதிவுகளை இணைத்த திரட்டிகளுக்கும் நன்றிகள்.

வெற்றிகள்:
எனது கிராமத்து பாடசாலை மற்றும் பிள்ளைகளின் வறுமை நிலைமை என்பவை தொடர்பாக எழுதிய பதிவுகளால் எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஒரு தூண்டுதலையும் எமது பாடசாலை மற்றும் பிள்ளைகளுக்கு உதவும் எண்ணத்தையும் ஏற்படுத்தியது கடந்த வருட வெற்றிகளில் ஒன்று.
கடந்த மாசி (February) மாதத்திலிருந்து பொருளாதார வசதி குறைந்த குடும்பச் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தினை மூன்று பிள்ளைகளுக்கு என ஆரம்பித்து சித்திரை மாதத்தில் இன்னும் இருவர் சோக்கப்பட்டு (வரும் தை மாதத்திலிருந்து மேலும் இரு பிள்ளைகளை இணைக்கக்கூடியதாக இருக்கும்)இச்சேவைக்கு ஒரு பாலமாக இருப்பது மகிழ்ச்சி வெற்றி. இவ்வுதவிச்சேவையை எமது உறவு கனடா வாழ் திரு.இரா. இராஜேந்திரா அவர்களுக்கு நன்றி கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
"கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது" இதற்காக யாரோ ஒரு பிள்ளைகளுக்காக அவர்கள் கல்விக்காக ஆற்றும் உதவி எப்போதும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. இவ்வுதவிச்சேவை கடவுளுக்கு செய்யும் திருத்தொண்டாகவே எண்ணுகிறேன். எங்கெல்லாம் படிப்பதற்கு பிள்ளைகள் கஸ்டப்படுவதை உணருங்கால் ஏதாவது முடிந்தளவு உதவுங்கள் நாளைய விருட்சங்கள் வளர வாழ்த்துங்கள். இது தொடர்பான எனது முந்தைய இடுகை
அதேபோல் எமது பாடசாலைக்காக எமது கனேடிய வாழ் உறவுகள் சேர்ந்து பெருந்தொகை நிதி உதவியளித்தமைக்கும் நன்றிகளை சொல்லுகிறோம். என்றும் இணைந்திருங்கள் எமது கிராமத்தோடு.

நட்பு வெற்றி:

இணையம் மூலம் யாரோ யாரோ ஆனவர்களையும் முகம் தெரியாமல் முகவரி அறியாமல் எழுத்துக்களால் இணைந்த இதயங்கள் எத்தனையோ பேர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆனால் அகத்தின் எண்ணம் பதிவில் நுகரலாம். இவ்வாறு எங்கோ ஆனவர்களையும் இதயம் தடவிப்பார்க்க வைக்கும். சமூகவலைத்தளங்கள் மூலம் அவர்கள், நிலைமை அறிய அவர்களுக்கு நல்லதோ அல்லது அதற்கு எதிர்மாறாவோ ஏற்படின் அவர்களை எட்டிப்பார்த்து நலம் கேட்டு பங்கெடுக்கும் தன்மை வெற்றி என்றே சொல்லலாம்.
ஒரு எழுத்துப்பிழை கண்டு அதைச்சொல்லி மின்மடல் அனுப்ப அதன் பின் இணைந்த அந்த நல்லுறவு, அறிவாளன் எனக்கு கிடைத்த கடந்த வருட நட்பு வெற்றி. வாழ்த்துக்கள் தல. உங்களால் வாசிப்புப்பழக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டேன். புத்தகங்களை வாங்க முயற்சிகள் மேற்கொண்டேன். மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். அதிகளவு பதிவெழுதும் எண்ணத்தை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்திருங்கள் என்னோடு எழுத்தோடு.

மனம் கவர்ந்த பாடல்:
எல்லோரையும் மனசு வலித்த பாடல் "பூக்கள் பூக்கும் தருணம் ..." இப்பாடல் பற்றி முன்பொரு பதிவிட்டிந்தேன். சிதறும் சில்லறைகள் - 2
அந்தப்பாடல் இங்க வீடியோவில் ஆனால் இந்த காணொளி அழகாக இருக்கு வரிகளுடன்.
பாருங்கள்


எனது வாழ்வில்
கடந்த வருட ஆரம்பகாலங்களில் கஸ்டங்களை எதிர்நோக்கியிருந்தேன். ஆனாலும் எனது மருமகள் சயுரந்திரி பிறந்த தருணம் எனக்கு தனியார் துறையில் வேலை ஒரு திட்டத்துக்காக கிடைத்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி. எல்லோரும் அதிஸ்டக்கார மாமா என்று சொன்னார்கள் அப்போது.
நன்றி எனது தூக்கத்தை கலைத்து இனிய மனதை தந்த எனது மருமகளே நன்றி உனது வெற்றிகளுக்கு துணையாக இருப்பேன்.
இப்பொழுது தடுமலும் இருமலுமாய் கஸ்டப்படுகிறாள்
என்தாயுடன் என் மருமகள்



பின்னர் ஆசிரியத்துவத்துக்கு போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவாகி இணைந்துகொண்டேன். இவ்வாறு மீண்டும் பாடசாலையில் உருவாக உருவாக்க. மட்டற்ற மகிழ்ச்சி.

பதிவர் சந்திப்பு
அனேக உறவுகளை சந்திக்க கிடைத்தது சந்தோசம்.

கவலை:
சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் பாடவேண்டும் என்கிற செய்தி. அது ஓய்ந்துபோனாலும் தீ மூட்டப்பட்டதாக உணர்ந்தேன். தமிழிலும் முழுமயாக பாடவராது எனக்கு அதன்மேல் ஒரு விருப்பம் விருப்பபடாமல் போனதால்.ஆனாலும் மனசுக்கு கவலையளித்த விடயம் இது. இதற்கு வலுச்சேர்க்கும் படியாக இப்பொழுது ஆரம்பித்திருக்கும் "சிலோன்" சிறிலங்காவாக இருப்பது. தமிழில் இலங்கையா? இல்லை "சிறிலங்கா" வா "ஸ்ரீ லங்கா" வா என இன்னும் தெளிவாக இல்லை.

சில பேரை இழந்திருப்பது கவலையானது. அதேபோல் இணைந்திருக்காமல் இருப்பதும் அதே நட்பில் தவறானது.

தெளிந்தும் தெளியாமலும்
சீனா உலகநாடுகளில் முதன்மை பெற்று வருகிறது. அண்மைய ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகள் என்று விளையாட்டுத்துறைகளிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தியிருப்பது மற்றைய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையா அச்சுறுத்தலா என்பதும் நமது நாடு இந்திய, சீன பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்ந்து உறவாடுவதும் இன்னொரு சிந்திக்ககூடிய பிரச்சனைக்க வழிவகுக்குமா?? என்பது.

ஒரு ஸ்டேடஸ்:

"அங்கு நான் இருக்கிறேனா என்பது எனக்கு நீ சொன்னால்தான் தெரிந்துகொள்வேன்.
என்மனதில் நீ இருப்பதை நான் உனக்கு சொல்லும் போதுதான் புரிந்துகொள்வாய் என்பதை நான் அறிவேன்."

ஊடுறுவல்
எப்போதும் மற்றவர்களை மற்றவர் விடயத்தை ஆராய்வதில் சிலருக்கு ஏன் மனிதருக்கு இருக்கும் இயல்பு. இது சிலநேரங்களில் தேவையாகிறது. சில நேரங்களில் வெறுப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. இணையத்தில் இந்த புல்லுருவிகள் (ஹக்கர்ஸ்) இருப்பது விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் போல.(அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது.) ஆனாலும் அந்த ஜூலியன் பால் அசாங் (julian paul assange) இன் நேர்மை பிடிச்சிருக்கு காரணம்
//வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்', இவை ஜூலியனின் உபதேசங்கள். ///
மேலதிக தகவல்கள் சுடுதண்ணியில்
இருந்தாலும் மற்றவர்களின் தகவல்களை அறிய முயற்சிகளை மேற்கொள்ளுவது ???

நன்றி


விடைபெறும் வருடத்திற்கான முந்தைய கவிதையின் சில வரிகள்

ஒவ்வொருமுறையும்
ஒவ்வொன்றாய்
உதித்துக்கொண்டன
உயிர்த்தெழுந்து கொண்டேன்
கிழிக்கப்பட்டன
உயிர்ப்பிழிந்து கொண்டேன்

நீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்
இருட்டிலும்
விண்மீன்களுகாய்
இதுவரை
ஆனதுக்காக
நன்றி சொல்லுக்கொண்டு

நீ
உதித்து
உதிர்ந்தாய்
நான்
உயிர்ப்பித்திருக்கிறேன்

விடைபெறுகிறேன்
புதுவருட வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு
அனைவருக்கும் இனிய வருடமாகவும் சந்தோசச்சாரல்கள் நிறைந்த வருடமாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

Tuesday, December 28, 2010

நீ உதித்து உதிர நான் உயிர்ப்பித்து

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் ஆனாய்

பூக்களாய்
சிரிப்புக்கள்
இலைகளாய்
சிலிர்ப்புக்கள்
தளைகளாய்
உயர்வுகள்
பழங்களாய்
வெற்றிகள்

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் உதிர்ந்தாய்

உதிர்ந்த பூக்களாய்
எண்ணங்கள்
இலையுதிர்வுகளாய்
தோல்விகள்
வாடிய தளைகளாய்
மனவெழுச்சிகள்



ஒவ்வொருமுறையும்
ஒவ்வொன்றாய்
உதித்துக்கொண்டன
உயிர்த்தெழுந்து கொண்டேன்
கிழிக்கப்பட்டன
உயிர்ப்பிழிந்து கொண்டேன்

நீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்
இருட்டிலும்
விண்மீன்களுகாய்
இதுவரை
ஆனதுக்காக
நன்றி சொல்லுக்கொண்டு



நீ
உதித்து
உதிர்ந்தாய்
நான்
உயிர்ப்பித்திருக்கிறேன்

Sunday, December 26, 2010

கல்லறைகளில் கண்ணீர்ப்பூக்கள்

ஆண்டுகள் ஆறு
ஆனாலும்
நினைவுகளில் வழியுது
அந்த கோர முகம்.
நிகழ்வும் சேர்ந்து
வதைத்துக்கொண்டுதான்
இருக்கிறது

"அம்மா
அப்பா
அண்ணா
அக்கா
மகள்
மகன்
பிள்ள
மாமா
மாமி
தம்பி
தங்கச்சி
பாட்டி
தாத்தா"
உயிர் பின்னிய
உறவுகள்
"அது
உடல்"
என்று
கடைசியில்
எதுவுமில்லா...

'கண்டுபிடிச்சாச்சா'
'இன்னுமில்லையா'
'ஒரு கை இல்லை'
'முகம் இல்லை'
'ஏதாவது ஒரு துண்டு'

விசிறி அடிச்சு
விழுத்திவிட்டுப்போன
வார்த்தைகளும்

உங்களோடு
நாம்
இருக்கிறோம்
கண்ணீரையும் சேர்த்துக்கொண்டு
துடைக்கும் விரல்களாய்
உணர்வுகளாய்...
சாந்தப்படுத்திக்கொண்ட
உள்ளங்களும்....

இன்றும்
மனக்கல்லறைகளில்
பூக்கள் தூவிக்கொண்டு
இதயத்தை துவட்டிக்கொண்டு
கண்களை ஈரப்படுத்திக்கொண்டு
அஞ்சலிக்கிறோம்....




எங்கெல்லாம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோ அவர்களுக்காக அஞ்சலிக்கிறோம்.. உங்கள் உயிர் அவதியாய் பிரிந்தாலும் ஆத்மா சாந்திஅடையட்டும். சுனாமியின் சுவடுகளாய் மனதில், கல்லறைகளில் பூக்கள் சொரிகிறோம்

Saturday, December 25, 2010

சிதறும் சில்லறைகள் - 09

இன்றைய நாள்
நத்தார் தினப்பண்டிகை
"இந்நாள் இனிய நாளாக அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்"

இன்றைய குறுஞ்செய்தி:

உங்கள் மகிழ்ச்சியின் வெளிச்சத்தில்
அன்பு கொண்டு அன்பு செய்க
இதயம் கொண்டு இன்பம் செய்க
யேசு பாலனின் இனிய நாளில்
வெற்றி தேவதைகள் உங்களைச்
சுற்றி வரட்டும்



நமது வாழ்க்கையில் சில நாட்கள் மறக்கமுடியாத நாட்களாக இருக்கும் நாம் சிலவேளை சில செயற்பாடுகளையும் மறக்காமல் இருக்கவேண்டும் என்று ஒரு நினைவில் நிற்கக்கூடிய நாட்களைத் தெரிவுசெய்வதும் வழமை.
அதேபோல்தான் நானும் இதேபோன்ற கிறிஸ்மஸ்தின நாளில் தான் எனது (புதிய)கணணியை வாங்கினேன் இற்றைக்கு நான்கு வருடங்கள் முன்பு. எனக்கு உதவியாக அல்லது தொல்லையாக இது இன்னும் இருந்துவருகிறது...

கவிதை கடந்தவருட நத்தார் பண்டிகைக்காக
வைக்கோலில் ஒர் ஒளிப்பிளம்பு
உலகம் மீட்க பிறந்த
உத்தமரின்
இத்தினம் முதல்
மனமெங்கணும்
மகிழ்ச்சி மலர்கள்
பூக்கட்டும்...

பதிவர் சந்திப்பு
ஒவ்வொருவர் வாழ்விலும் சந்திப்பு எப்போதும் இனிமையாகவும் நினைவில் நிற்கக்கூடியவையாகவும் இருப்பது மகிழ்ச்சியையும் சில சந்தர்ப்பங்களில் அதற்கு எதிர்மறையாகவும் இருக்கும். ஆனாலும் பதிவர் சந்திப்பு என்பது முகம் தெரியா எங்கெங்கோ ஆனவர்களையும் வலைப்பின்னலினூடாக அரட்டைகளிலும் தொலைபேசிகளினூடும் பதிவுகளினூடும் இணைந்த இதயங்கள் முகம் கொண்டு பேசும் இனிய பொழுது இப்பதிவர்சந்திப்பு.
கடந்த 19 ஆம் திகதி இலங்கை தமிழ்வலைப்பதிவர்கள் நாம் ஒன்றிணைந்தோம் சந்திப்புக்காக. மகிழ்ச்சி. இதற்கு முன்னைய நாளிலும் கிறிக்கட் விளையாட்டில் ஈடுபட்டோம். தித்திப்பு.

முதலில் இதனை ஏற்பாடு செய்த மாலவன் நிரூஜா(ஏற்பாட்டுக்குழு முதல்வர்), அனு, ,கங்கோன் கோபி , வரோ, அஸ்வின், வதீஸ் ,பவன், அனைவருக்கும் முதலில் நன்றிகள். காரணம் வேலைப்பளு உலகத்தில் சந்திப்புக்கு அனைவரையும் இணைத்து ஒருமிக்கவைப்பது இக்காலகட்டத்தில் மிகவும் கடினமாகதாகவே இருக்கிறது. ஆனபொழுதிலும் நாம் ஒன்றிணைந்தது மகிழ்ச்சி.
இச்சந்திப்புக்காக அனுவின் அம்மாசெய்துதந்த உருளைகள்(ரோல்ஸ்), நீரூஜாவின் வீட்டிலிருந்து வந்த கேசரி, பக்கோடா(எங்கிருந்து என்று சொல்லமாட்டன்), பவன் குழைத்த அன்னாசி மென்பானம் அனைத்தும் நல்லா இருந்தது.
ரோல்ஸ்க்காக அருவக்கத்திகொண்டு உருளைக்கிழங்கு தோலுரித்த கங்கோன், வதீஸ், மற்றும் அதிகாலை 6 மணிக்கு ???? எழுந்து வந்து அன்னாசித் துண்டுகளாக்கிய வதீஸ், பல்வேறு உதவிகள் புரிந்த வரோ, பக்கோடாவை அடிக்கடி மென்றுவிழுங்கி தொப்பையை வளர்த்துக்கொண்டிருந்த நிரூஜா, மென்பானத்தை குடித்து முடிக்கவேண்டுமென்று உழைத்த மருதமூரான் மற்றும் கங்கொன், நேரலைசெய்த மது...இப்படியே நல்ல இனிமையான நினைவுகளுடன் இனிதான சந்திப்பில் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

பதிவுஎழுதுதல் பற்றி பல்வேறு வாதங்கள் எழுந்தன.
அவற்றுக்காக நான். நேரலையின் அரட்டையில் நண்பர் நிமலபிரகாஷ் சொன்ன விடயம்
முதல்ல பதிவர்கள் என்றால் பதிவு அதிகமாக எழுதுங்க பிறகு அதை மேலும் விரிவுபடுத்தலாம்.
சில படங்கள்


இனிய அந்நாள்

இப்பதிவர் சந்திப்பிலே நினைவாக எனக்கு தேவைப்பட்ட ஒரு பொருளை வாங்கமுடிவு செய்தேன் இதற்காக எனக்காக உதவிய கெளபோய்மது என்றும் நெஞ்சினில். அதைவிட ஒரு நீங்கா நினைவுகளையும் என்னுடனும் பகிரந்தது பன்மடங்கு சந்தோசமும் நினைவுளும்.
மது உங்கள் அம்மாவுக்காக

ஒரு தாய்மையின் தன்மையை உறுதியை உருவாக்குதிறனைக்கண்டு நெகிழ்ந்தேன். தாயே உனக்கு நான் யாரோ ஆகலாம் உள்ளத்தில் எனக்கு ஏதோ ஒரு தீயை வளர்த்துவிட்டாய். எங்குற்றாலும் எனது வாழ்த்துக்களையும் உனது மக்களின் சந்தோசமாய் ஏற்றுக்கொள்க. நீ வாழீ...

ஒரு ஸ்டேடஸ்


உறவுகளுக்காக ஏங்கும் உலகிலே கிடைக்கும் நல்உள்ளங்களில் மகிழ்ச்சி விதைகளையும் அன்பு வேர்களையும் பயிரிடுக. அதை கவனமாக தொடர்ந்து வளர்க்க முயல்க.
ஒவ்வொரு உணர்வுகளுக்குள்ளும் அன்புறவு கொள்க. நட்பின் நீளம் வெல்க.

Friday, December 24, 2010

இது ஸ்டேடஸ் -09

""நீ மலை உச்சியின் உயர்ந்த சைபிரஸ் மரங்களாக இருக்காவிட்டாலும்
மலையடிவாரத்தின் புற்களாய் இருக்கலாம் . அதிலும் சிறந்த புல்லாய் இரு..""
(பாடசாலை பரிசளிப்பு விழாவில் பெற்றது )

""நண்பர்களை உற்றுநோக்குபவன் எதிரியை நேசிப்பவன்.
இருவருமில்லையேல் என் பாதையில் சறுக்கல்கள் ஏற்படலாம். ஆனாலும் இவர்கள்
இருவரையும் விட குடும்பத்தில் வாழ்பவன்.""


"நட்பின் நீளங்கள் புரியாவிட்டாலும் அதன் தாகம் உணர்வாய் ஒருநாள்"

"ஓ.. உயிரில்லா உயிர்க்கலத்திணிவு ஆண்டுகொள்கிறது.. ஈரவலய உடல்வெப்பம் உலர்வலயமாகிறது. பல நாட்களின் பின் இப்படி ஒரு கஸ்டம் ##வைரஸ் காய்ச்சல்#"

"மனக்குழப்பத்தில் மனஅழுத்தத்தில் ஒரு நல்லுறவு மரணத்தை வாங்கிக்கொண்டது என்னை இன்று அழுத்திவிட்டது. கண்ணீரைச் சொரிந்து தள்ளியது.:'((""

"காத்திருக்கிறேன் ஒரு மாறுதலுக்காக. மாற்றம் எனக்குள் ஆயிரமாயிரம் விதைகளை வளர்க்க காத்திருக்கிறேன். விருட்சங்களே பொறுத்திருங்கள். வேராகிறேன்""

""நான் "சேறு" தாமரைகளே! வளர்ந்து மலர்ந்துகொள்ளுங்கள். காத்திருக்கிறேன் உங்களுக்காக""

""மீண்டும் பாடசாலையில் உருவாக இல்லை உருவாக்க""

""இன்பமும் துன்பமும் நிறைந்த வேதனையில்.... அழதாலும் சிரித்தாலும்... வாழ்க்கை என்றே முற்றுப்புள்ளி...""

""இன்று மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் புனரமைப்பு நானும் செயற்குழு உறுப்பினரானேன். விரைவில் தமிழால் தமிழுக்கு எப்போதும் போலவே உரமூட்ட ஆரம்பம்
20 Nov ""

""எந்த இடத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு எந்த இடத்தில் எதைச்சொல்லக்கூடாது என்பதிலும் இருக்கவேண்டும்##பிடித்திருக்கு""

""எமது ஊர் பாடசாலையிலிருந்து வாழ்த்துக்களைக் கேட்டதாக தகவல் வீட்டிலிருந்து காதுகளை இனிதாக்கி உறவுகளுக்கு நன்றி கூறுகிறோம்.""

""மண்ணில் வாழ்வதை விட மற்றவர்களின் மனதில் வாழ்வதில் தான் உண்மை வாழ்க்கை இருக்கிறது.##இன்று கிடைத்த குறுஞ்செய்தி##""

""நேற்றைய பொழுது ஒரு தாய்மையின் தன்மையை உறுதியை உருவாக்குதிறனைக்கண்டு நெகிழ்ந்தேன். தாயே உனக்கு நான் யாரோ ஆகலாம் உள்ளத்தில் எனக்கு ஏதோ ஒரு தீயை வளர்த்துவிட்டாய். எங்குற்றாலும் எனது வாழ்த்துக்களையும் உனது மக்களின் சந்தோசமாய் ஏற்றுக்கொள்க. நீ வாழீ....""

""சில சந்தோசங்கள் என்னைச் சலவைசெய்தாலும் அழுக்கை மனது கழுவப்படமுடியாமல் தவிக்குது ............"'

நமது பதிவர் சந்திப்பின் ஒரு உன்னத படம்.

Thursday, December 23, 2010

ஈழத்துப்பூராடனாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி

"'தேற்றாத்தீவு ஈழத்துப்பூராடனாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளையும் அனுதாபங்களையும் அன்னாரின் குடும்ப உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.... _தேனூர் வாழ் சமூகம்"'"

ஈழத்து பூராடனார் என இலக்கிய உலகில் அறியப்பட்ட திரு. செல்வராசகோபால் அவர்கள் கனடாவில் Mississauga நகரில் 21 .12 .2010 அன்று காலமாகிவிட்டார்


நமது பாலசிங்கம் சுகுமார் அவர்களின் முகப்புத்தக குறிப்பிலிருந்து
பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார் நினைவின் சுவடுகளில்
by Balasingam Sugumar on Wednesday, 22 December 2010 at 16:07


பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார்

தமிழ் மொழி தொன்மை யான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டு ள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் இலக்கியம், இலக்கணம், அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப் புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.

சிலர் சொல்லாராய்ச்சித் துறையில் மட்டும் ஈடுபட்டுத் தம் பேரறிவு கொண்டு உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் இலக்கண நூல்களை மட்டும் நுண்ணிதின் ஆய்ந்து அறிஞர்களாக விளங்குவார்கள். சிலர் பக்திப் பனுவல்களில் ஈடுபட்டு மெய்யுணர்ந்து மேன்மை பெறுவது உண்டு. சிலர் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகத் தமிழுக்கு ஆக்கம் தேடியிருப்பார்கள்.

சிலர் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை அறிவதில் தம் வாழ்நாள் ஆய்வைச் செலவிட்டி ருப்பார்கள். சுருங்கச் சொன்னால் சிலர் இயலிலும் சிலர் இசையிலும், சிலர் நாடகத்திலும் இன்னும் சிலர் இப்பகுப்பில் அடங்காத பிற துறைகளிலும் தம் கால் பதித்து அறிஞர்களால் பாராட்டப்படுவது உண்டு.

மேற்குறித்த பல துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்து இன்னும் முற்றாகத் தமிழகத்தாரால் அறியப்படாமல் இருக்கும் அறிஞர்களுள் இலங்கையில் பிறந்து இன்று கனடாவில் வாழும் அறிஞர் ஈழத்துப் பூராடனார் (பிறப்பு 13.12.1928) அவர்களின் படைப்புகளை யான் பதினேழாண்டுகளாக நன்கு அறிவேன். எண்பத்திரண்டு அகவையிலும் அடக்கமும் அமைதியும் கொண்டு தமிழுக்கு உழைப்பதைத் தம் கடமையாகக் கொண்டு இவர் இயங்குகிறார்.

பதிப்புத் துறையில் இவருக்கு மிகப் பெரிய பட்டறிவு உண்டு என்பதாலும் தாமே அச்சுக்கூடம் வைத்திருப்பதாலும் தமிழுக்கு ஆக்கமான நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார். தம் நூல்களைத் தமிழ் வழங்கும் உலகப் பல்கலைக்கழகம் சிலவற்றிற்கு அன்பளிப்பாக வழங்குவதைக் கடமையாகக் கொண்டவர். கனடாவில் இவர்களின் அச்சகம் சிறப்புடன் செயல்படுகின்றது. நூல்களும் இதழ்களும் குறிப்பிடத்தகும் தரத்துடன் வெளிவருகின்றன.

ஈழத்துப் பூராடனாரின் படைப்புகள் கண்டு உலகமே வியக்கும்படியாக இவர் தம் தமிழ்ப் படைப்புகள் உள்ளன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப் பூராடனாரின் இயற்பெயர் சு. தா. செல்வராசா கோபால் என்பதாகும். தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர் இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர்.

ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் இந்த நிகண்டு நூலைப் படைக்க அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார். மட்டக்களப்பில் பயிலப்பட்டு வரும் சொற்கள் மற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குப் புதியதாக இருப்பதுடன் மட்டக்களப்பில் இருப்பவர்களுக்கே பல தடுமாற்றங்களை உண்டு பண்ணுவதை உணர்ந்து ஆசிரியர் இந்த நூலை இயற்றியுள்ளார். ஈழத்துப் பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,



1. உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்)

2. அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்)

3. தொழிற் பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்)

4. இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்)

5. கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்கள்)

என ஐந்து வகையாகப் பகுத்துத் தமிழுக்கு அணிசெய்யும் அழகிய நூலைத் தந்துள்ள இவர் பணியை எவ்வளவு போற்றினாலும் தகும். வழக்கில் பொருள் விளங்காத சொற்களை நிலைப்படுத்தி விளக்கம் தந்துள்ளமை போற்றுதலுக்கு உரிய ஒரு செயலாகும். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984இல் முதல் பதிப்பும் (48 பக்கம்) இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தன. மட்டக்களப்பிற்கு மாட்சி தரும் பாடும்மீன் என்னும் நீரர மகளிரின் பெயரில் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள், சொற்றொடர்களின் அகராதி’ என்னும் ஈழத்துப் பூராடனாரின் மற்றொரு சொல்லாய்வுக்கு உரிய நூலும் குறிப்பிடத் தகுந்ததே ஆகும். மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்த அரிய சொற்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள், பழக்க வழக்கம், பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப் பூராடனார் வழங்கியுள்ளார். மட்டக்களப்பின் மகிழ்வுப் புதையல்கள், கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள் வயல் இலக்கியம், ஊஞ்சல் இலக்கியம், வசந்தன் கூத்து ஒருநோக்கு, மட்டக்களப்பு மாநில உபகதைகள் போன்ற நூல்கள் இவரின் நாட்டுப்புறவியல் துறைக்குரிய பங்களிப்பாக விளங்குகின்றன.

நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். அவற்றுள் கூத்தர்வெண்பா, கூத்தர் விருத்தம், கூத்தர் குறள், கூத்தர் அகவல், மட்டக்களப்பு மாநில இருபாங்குக் கூத்துகளை விளக்கும் வகையில் இவர் தந்துள்ள கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு, கூத்துக்கலைத் திரவியம், வடமோடி கூத்து, இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும், கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன், தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும், கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை இரு பாங்குக் கூத்துக்கலைஞன் ஏசு.ஈ. கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும், மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை என்னும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பனவாகும்.

மொழிபெயர்ப்பு வகையில் நம் ஈழத்துப் பூராடனார் அவர்கள் தம் பன்மொழி அறிவுகொண்டு பல நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார். கிரேக்க நாட்டின் ஆதி கவிஞரான ஓமரின் இலியட் ஓடிசி காப்பியங்களைத் தமிழில் பாட்டு வடிவில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதுவரை கிரேக்க நூல்கள் தமிழுக்கு அறிமுகம் இல்லாத சூழலில் நம் ஈழத்துப் பூராடனாரின் பணிகள் போற்றத் தகுந்தன.

இலங்கையில் பிறந்து கல்விப் பணியாற்றி ஓய்வாக வாழ்க்கை வாழ வேண்டிய சூழலில் இடம்பெயர்ந்தாலும் தம் தமிழாய்வுக்கு விடை தராத ஈழத்துப் பூராடனாரின் கிரேக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் இங்கு தனித்துச் சுட்டத்தக்கன.

ஈழத்துப் பூராடனாரின் கிரேக்க காவிய மொழிபெயர்ப்பு

அறிஞர் ஈழத்துப் பூராடனார் கிரேக்க மொழியில் ஓமார் எழுதிய ஒடிசி இலியட்டு காவியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை போற்றத்தகுந்த பணியாகும். கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதை மூலமாகக் கொண்டு நம் ஈழத்துப் பூராடனார் தமிழில் செய்யுளில் தந்துள்ளார். தமிழ் போல் உயரிய மொழியான கிரேக்க மொழி பாவியங்கள் அந்த மொழியின் இலக்கியச் செழுமையை உணர்த்துவதுடன் கிரேக்க மக்களின் கடல் பயண அறிவு, இசை அறிவு, நாடக அறிவு என யாவற்றையும் காட்டும் ஆவணமாக உள்ளது.

ஈழத்துப் பூராடனார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். 11100 பாடல் வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிரேக்க மொழி ஓமரின் காப்பியங்கள் பற்றி ஈழத்துப் பூராடனார் பின்வரும் குறிப்புகளைத் தந்துள்ளார்.

‘கிரேக்க மொழி தமிழைப் போன்று செம்மொழி இலக்கியம் படைத்த ஒரு பண்டைய மொழி. இதில் உள்ள மகாகாவியங்களில் ஹோமர் மகாகவியின் ஒடிஸ்சியும் இலியட்டும் மிகவும் பழைமையுஞ் சிறப்பும் வாய்ந்தவை. இதன் கிளைக் கதைகளாகவே ஆதிக் கிரேக்கத்தின் பிந்திய இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவை அநேகமாக நாடக வடிவிலேயே அமைந்துள்ளன. கப்பற் பயணங்களிற் தேர்ந்தவராய் கிரேக்கர் முதலிடம் வகித்தது போல் நாடக அரங்குகளை அமைப்பதிலும் நடத்துவதிலும் அவர்கள் தலையா சிறப்புற்றிருந்தனர். எனவே நாடக இலக்கியங்கள் அங்கு நிலைபெற்று வளரலாயிற்று. (இலியட் பக்கம் 8)

பண்டைக்காலத்தில் கூத்தும் நாடகமும் செழித்திருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 99 வகையான கூத்துக்களை எடுத்துக்காட்டும் சிலப்பதிகார உரையாசியர் அடியாக்கு நல்லார் தமிழகத்தின் செழித்த கூத்து மரபுகளை நமக்கு நினைவூட்டியுள்ளது போல் கிரேக்கர்களின் நாடக இசையறிவு யாவும் கிரேக்க மொழியில் இருந்துள்ளதை ஈழத்துப் பூராடனார் தமிழுக்கு வழங்கியுள்ள தமிழாக்கத்தின் வழியாக அறிய முடிகிறது.

அண்மைக் காலமாக ஈழத்துப்பூராடனார் ஐஞ்குறுநூற்று அரங்கம், சூளாமணித் தெளிவு, கல்லாடம் கற்போம், சொல்லாடுவோம், நைடதம் யாருக்கும் ஒரு ஒளடதம் ஆய்வுக் கண்ணோட்டம், சீவகசிந்தாமணி, ஆய்வுச் சிந்தனைகள், பெருங்கதை ஆய்வுநோக்கு, உள்ளிட்ட நூல்கள் பற்றிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ் நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக உருவாக்கியுள்ளார். தமிழ்மொழியின் தோற்றம், அதன் சிறப்பு உணர்த்தும் நூலாக இது உள்ளது.

இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும், உலகளவில் தமிழ்ப் பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார்.

தமிழ் கணிப்பொறித் துறையில் இவர் குடும்பத்தார் மிகப்பெரிய பங்களிப்பு செயற்துள்ளனர். இவர்கள் வெளியிட்ட பெத்லகேம் கலம்பகம் என்ற நூலே தமிழில் கணிப்பொறியில் அச்சான முதல் நூலாக விளங்குகிறது

நன்றி சுகுமார் சேர்.

தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்! -முனைவர் மு.இளங்கோவன் விரிவாக எடுத்துரைக்கிறார்

Wednesday, December 15, 2010

பிரிகின்ற உரிமையோடு உறவு வேண்டும்

இருவரும்
பல தடவைகளில்
நாம்

'நீ'
'நான்'
உரிமையாய்
ஒருமைப்பட்டுக்கொண்டது
வார்த்தைகள்

செல்போனிலும்
சில்மிசங்களாய்
நீண்டுகொண்ட
வாழ்க்கை
'குறுஞ்செய்திகளாய்'

இதுவரை யாருக்கும்
அறிமுகப்படுத்த முடியாமல்
நட்பும் காதலும்
உரிமைப் போராட்டம்
நடத்திக்கொண்டது

நானும் நீயும் மறுத்தாலும்
ஈரப்பொழுதுகளின்
இருட்டு போர்வையில்
கண்கள் உதிர்த்த
வெப்பத்துளிகளுக்கும்
மூச்சுகுழல்வாயில்
முட்டி மோதிய
காதல்காற்றுக்களுக்கும்
சொல்லிவிட்டுப்போ
பிரிகின்ற நேரம்
உரிமையோடு
என்ன
உறவென்று

பிரிந்துவிடு
நீயாக
பிரித்துவிட்டு போகாதே
தானாக

நானும் காதலும்
வாழ்வோம்
இப்போதும்
நாம்

Monday, December 6, 2010

தித்திப்பு (சுயமாக சுகமாக வெற்றி)

வணக்கம்
எதிர்பார்த்து எதுவும் நடைபெறாமல் போனால் கவலை. மனதுக்கு ஒரு நெருக்கடி ஆனாலும் அவ் எதிர்பார்ப்பு நிறைவேறினால் ஒரு தித்திப்பு இல்லையா.

எங்க ஊர் பாடசாலையின் வறுமையும் திறமையையும் இங்க பார்த்திருப்பீங்க.

அதே போல் கடவுள் எங்கே .....பிள்ளைய பாருங்க.. பார்த்திருப்பீங்க.



எமது பாடசாலையின் வறுமையின் அல்லது முயற்சியாண்மையில் வெற்றிகளில் பொருளாதாரம் தடையாக இருக்கின்றது என்பது எமது கண்களால் துருப்பட்டுக்கொண்டிருந்த விடயம்.

ஆனாலும் எங்கெல்லாம் மனம் காயம் படும்போதெல்லாம் காயம் ஆற்ற மனம் ஏங்கும் உணர்வு நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்துகொண்டிருக்கும் என்பதை காணக்கூடியதாக இருந்தது எனக்கு.

காரணம் இவற்றின் எழுத்துக்களாலே எமது மண்ணின் பல உறவுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது இந்தப்பதிவுலகத்தில் நான் அடைந்த வெற்றிகளில் ஒன்று.
இதுமட்டுமன்றி நமது வறுமை அல்லது பொருளாதார வசதிகுறைந்த பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஒருசிலபேரது இடைவெளியை நிரப்பக்கூடியதாக எமது கனேடிய வாழ் உறவுகளின் முயற்சிகளால் அன்பளிப்புக்கள் நிதியுதவிகள் கிடைத்தது பதிவுலகத்தில் முழுமையாக நான் பெற்ற உயர்ந்த வெற்றி.
இதையும் தாண்டி எமது கிராம பாடசாலையின் பரிசளிப்பு விழா 2010 ஆண்டுக்கு நடைபெறுவது பொருளாதார பின்னடைவால் நிறுத்தப்படும் என்றிருந்த நிலையில் எமது புலம்பெயர் உறவுகளிகள் கனேடிய வாழ் உறவுகள் மூலம் நாம் எட்டமுடியாத இலக்கை அடையவைத்தது எமது உறவுகளின் உணர்வுகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றியைத் தவிர வேறென்ன கூறமுடியும்.

ஆக உறவுகளின் தேக்கம் எங்கெல்லாம் இருக்கிறது என்ற உணர்வை புரிந்துகொள்ள முடிந்தது. அதேபோல் எமது கிராம பிள்ளைகளின் திறமை அவர்கள் பொருளாதாரத்தினால் தடைப்படக்கூடாதென்ற பண்பு நம் எல்லோர் மனதிலும் இருக்கிறது என்பது மனதுக்கு இன்னுமின்னும் ஒரு புத்துணர்வைத்தந்தது.

ஆனாலும் இன்று இன்னொரு சம்பவம். கண்ணீரின் ஓரங்களை நனைத்துவிட்டுப்போனது. எனது வீட்டிற்கு ஒரு தாய் வந்து ' தனது பொருளாதார பின்னடைவைப்பற்றியும் கணவன் நீங்கிய பின்னர் கஸ்டப்பட்டு தனது பிள்ளைகளை வளர்க்கும் தன்மையையும் மற்றும் தனது பிள்ளைகளின் திறமைகளையும் சொல்லியபோது கடவுளுக்கும் கண்ணீர் கசிஞ்சிருக்கும். நான் இந்த வேலைகளில் இருந்து சற்று ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என்று நினைத்தபோது இப்படி ஒருநிலையை உணர்ந்தபோது ஒரு வாக்கியம் எனது சிறுபராயத்தில் எனக்காக சொல்லப்பட்டது எனது மாமாவால்
சுவாமி விவேகானந்தரினது பொன்மொழி அது.
"நன்மை செய்யப் பிறந்த நீ
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாதிரு"

இந்த பொன்மொழி எங்கெல்லாம் கஸ்டம் தெரிகிறதோ அங்கெல்லாம் எனது மனது பார்க்கும்போது கண்கள் வாசிக்கும் ஒரு வாக்கியம். ஒவ்வொருமுறையும் நான் நானாக இருக்கிறேனா என்று என்னையே கேட்டுக்கொள்ளும்.

இன்று இந்த தித்திப்பு ஒரு சுயபுராணமாய் இருக்கலாம். ஆனாலும் எமது உறவுகளின் ஒன்றுசேர்ந்த இந்த முயற்சியை தொடர்ந்து எமது பிள்ளைகளுக்காக செய்யவேண்டும் என்ற தன்மையைச்சேர்த்துவிடுகிறது.

Saturday, December 4, 2010

வயலினும் வாழ்க்கையும்

ஏதேதோ
இடறுமுடக்காய்
வாசித்தாலும்
மழழையின்
மழை

சந்தம் பொருந்திய
சங்கீதமானாலும்
குழந்தை பாடும்
பாட்டு

சூரியன் வரவை
வர்ணித்தாலும்
இயற்கையின்
அரவம்

நான்
நாண்
கைகளே
மீட்டுகின்றன

வயலினே
வாழ்க்கை

புன்னகைக்கும்
பூக்களே
நண்பர்கள்

மரங்களின்
இலைகளின்
ஓசையல்ல
என்னிதயத்தின்
பாஷையடா
நமது வீரத்தின்
தீரமடா
வாருங்கள் நமக்காக
வாசிப்போம்



இந்தப்படம் இங்கிருந்து சுட்டது. நன்றி ஜனா அண்ணன்

Tuesday, November 30, 2010

நரகமும் சொர்கமும் (எயிட்ஸ் தினம் 2010)

நான் அழிந்து
என்னை
அழித்துவிட்டுப்போன
"உறவு"

எனக்காக
தற்செயலாக
வேண்டுமென்றே
ஆளாக
ஏற்றப்பட்ட "ஊசி"

உதடு கடித்து
உமிழ்ந்து உசுப்பிய
முத்தம்
என்னில் சிக்கிய
"இரத்தம்"

சொல்லவில்லை
நீர்ப்பீடன எதிரி
இணைக்கப்பட்டிருக்கு
இறந்துவிடு என்று

கிழிந்த சேலையில்
தெரிந்தது
வாழ்ந்த வாழ்க்கை

இழந்தபோதுதான்
உணர்வானது
இருந்தவரை
வாழ்க்கை

சொர்க்கமும்
நரகமும்
வார்த்தையிலும்
வாழும் 'நல்'
வாழ்க்கையிலும் தான்

ஒரு எயிட்ஸின் புலம்பல் பார்க்க

Sunday, November 28, 2010

சிதறும் சில்லறைகள் - 08 (வாசிப்பு)

உலகம் உன் வசம்

பலநாட்களாக எழுத இருந்து எழுதாமல் போன விடயம் தொடா்பாடல் ஆனால் அதுபற்றி எழுதுவதற்கிடையில் என்கையில் ஒரு புத்தகம் கிடைத்தது.
அது உலகம் உன் வசம் - சோம. வள்ளியப்பன் எழுதியது. பல விடயங்கள் நமக்குத் தெரிந்த நாம் தவறிழைக்கின்ற நிறைய தகவல்கள் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதி இருக்கிறார். அவசியம் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்.
"எந்த இடத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு, எந்த இடத்தில் எதைச்சொல்லக் கூடாது என்பதிலும் இருக்கவேண்டும்" இதுவே இந்தப்புத்தகத்தின் நோக்கக்கூற்றாக இருக்கிறது.
மற்றவர்களுடன் எப்படித்தொடர்பு கொள்ளவேண்டும் என்பதில் தெளிவான விளக்கங்கள் போதியளவு உதாரணங்களுடனும் மேற்கோள்காட்டி எழுதியிருப்பது வாசிக்க மனதோடு ஒத்துப்போகிறது.
பேச்சுப்பற்றி
"அழகாக, சாமர்த்தியமாக, கோர்வையாக, தெளிவாக, சுருக்கமாக, நகைச்சுவையாக, தேவையான நேரத்தில், புரியும்படி, தேவைப்படும் நேரங்களில் விளக்கமாக, சமயத்தில் உடனடியாக, வேறு சில சமயங்களில் கொஞ்சம் பொறுத்து, கவனமாக, சொல்ல நினைக்கும் பொருள் விளங்கும்படியாக... - எனப் பல்வேறு சந்தர்ப்ங்களில் பல்வேறுவிதமாக நாம் பேசவேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கிறார். இப்படி பலவிடயங்களை பல ஆதரங்களுடனும் புனைவுகளுடனும் எழுதியிருக்கிறார். நல்லதொரு கையாள்கை அந்த எழுத்துக்களில் தெரிகிறது. வாசியுங்கள் அதன்படியாவது முயற்சியுங்கள் நானும் முயற்சிக்கிறேன்.


திருவிழாவில்
ஒரு
தெருப்பாடகன்


தலைப்பே ஒரு கவிதையாகி நிக்கிறது. மு.மேத்தாவின் படையல்களில் அதிக வலிகள் பல இடங்களில் தெரிந்தாலும் கார்த்திகைக்கென நான் மீண்டும் ஒருமுறை படித்த இந்தபுத்தகம் கவிதையின் நுரைகளில் நுழைந்து அவதிப்பட்டேன்.
"
எங்கள் தேசத்தில்
ஒவ்வொரு கட்சிக்கொடியும்
உயரத்தில்தான் பறக்கிறது
எங்கள் சகோதரர்களின்
தாழ்ந்த குனிந்த
தலைக்கம்பங்களின் மீது!
"
எங்கேயே என்னை உசுப்பிவிட்ட வரிகள்.
தமிழனின் கதை என்ற தலைப்பில் தலைப்பே அத்தனையையும் அடுக்கிக்கிட்டு போகிறது.
விழிகளைத் திறக்கும் விறகுகள் என்ற கவிதை குடிசையின் இலட்சணங்களை படம்போட்டுக்காட்டுகிறது. அசோகவனத்தில் ஒரு சோகவனம் நம்ம நாட்டை.............

"பூந்தோட்டமே
அங்கு
பொசுங்கிப் போன பின்
மரங்கள்
இங்கே
மாநாடு போடுகின்றன"

இது ஈழத்துப்பூக்கள் என்ற கவிதையில் ..........
அதிக கவிதைகள் நமது நாட்டுக்காக எழுதப்பட்டவைகளாக இரசிப்பதா வெறுமனே வாசிப்பதா என்று தெரியாமல் கண்களின் ஓரங்களில் ஈரத்தை உதிர்த்துக்கொண்டு நான்.

கவிஞன்

முற்றுமுழுதாக மாதாந்தக் கவிதைச் சஞ்சிகையாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலிருந்து வெளிவரும் இந்தக் கவிஞன் இதழ் கஸ்டப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. இன்னுமின்னும் இளையோர்களையும் கவிஞர்களையும் காலத்தை தின்றவர்களையும் தேடி வாசியுங்கள் வாங்கிக்கொண்டு எழுதிக்கொள்ளுங்கள் இன்னுமின்னும் வளரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

Saturday, November 27, 2010

மெளனித்து............

கனவாகிப்போன
கனவான்களின்
கனவுகளுக்குமாய்

கருவாக்கி உருவாக்கிய
கருவாகி உருவான
கருத்தாகிப்போன
கருக்களுக்குமாய்

வேரைத்தேடி புறப்பட்ட
விருட்சங்களுக்குமாய்

காற்றாகிப்போன
புயல்களுக்குமாய்

சூரியனை வருவிக்க
ஐதரசன் சுவாலை தின்ற
நட்சத்திரங்களுக்குமாய்

மனமே ஒளிர்க
மெளனமாய்

(நன்றி கார்க்கி முகப்புத்தக படம்)

Wednesday, November 24, 2010

குடித்துவிட்டுப்போகுது போர்வைக்குள்

துளி
சாரல்
தூறல்

அடைமழை
கூதல்
கண் முழிப்பு
கம்பளிப் போர்வை
காது விழிப்பு

கூரையிலிருந்து
சொட்டுகள்
ஓடுகளில் விரிசல்
........
......
மயான அமைதி
மரம்முறியும் இலை
தழை தலை அசைவு
முரட்டு சங்கீதம்

பெருந்துளி
கூரையிலும்
மண்ணிலும்
தாரைகள்

தலைமாட்டில் அம்மா
"டேய்
டீ சுடுகுது"

தடுமாற்றம்

மழை
குடித்துவிட்டதால்

மனதில் ஓட்டைகள்
மழை ஒழுகட்டும்

போர்வைக்குள்
நான்


Saturday, November 20, 2010

பால்நிலை (Gender)

பால்நிலை (Gender) என்றால் என்ன?

பால்நிலை என்பது சமூகத்தினால் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட சமூகப்பாத்திரங்கள் அவை பின்வரும் விடயங்களை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகின்றன
வேலை பெறுப்புக்கள்
தீர்மானம் எடுத்தல்
வெளிச்செல்லுதல்
வளங்களை அடையும் வழிகள்
சமூகவியல், சமூகப்பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்கள்.

இதனால் எமது அன்றாட வாழ்க்கை மேற்கூறப்பட்ட விடயங்களினால் பால்நிலை மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

எமது யதார்த்தத்திலிருந்து சில கேள்விகள்:
- சம அளவான வேலைக்கு ஆண் தொழிலாளர்களைவிட பெண் தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாகக் கொடுக்கப்படுவது ஏன்?

- குடும்பத் தலைவராக ஒரு பெண்ணை ஏன் குறிப்பிடுவது இல்லை? ( பெண் மட்டுமே குடும்பத்தில் வருமானத்தை ஈட்டுபவராக இருப்பினும் ஆண்களை மாத்திரமே குறிப்பிடுகின்றனர்.)

- ஆண்மை பெண்மை பற்றிய எமது விளக்கம் என்ன?

பால்நிலை வேறுபாட்டின் முக்கியத்துவம் யாது?

ஆண்களினதும் பெண்களினதும் அனுபவங்கள் வித்தியாசமானது! அவர்களின் தேவைகள் வித்தியாசமானவை! அவர்கள் பாவிக்கும் வளங்களும் வித்தியாசமானவை!

பால்நிலை பாரபட்சங்களை அடையாளப்படுத்தி, வெளிக்கொணர்ந்து தீர்ப்பதனால் மாத்திரமே வேலை செய்யும் சமூகத்திலுள்ள அனைவரும் பயனடைவார்கள். இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் பலவீனமான குழுக்கள் மீண்டும் மீண்டும் குரல் கொடுக்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
(வயது முதிர்ந்தோர், பிள்ளைகள், விசேட தேவை உள்ளவர்கள்). இதனால் தங்களது தேவைகளை உரிய முறையில் வெளிக்கொணர முடியாதவர்களின் தேவைகள் நம்மை வந்து அடையாது.
ஆகவே அபிவிருத்திட்டத்திற்குரிய பயன் பெறப்பமாட்டாது. முயற்ச்சி வீணாகும். இவர்களும் இச்சமூகத்தை சேர்ந்தவர்களே! ஆகவே அவர்களை அடையாளம் கண்டு முன்கொண்டுவர முயற்சி செய்வோம்.

பால்நிலை பகுப்பாய்வு என்றால் என்ன?
Joan W. Scott ('பாலியலானது வரலாற்று பகுப்பாய்வுக்கு ஓர் பிரயோசனமான வகை'The American u;istorical Review, Vol. 91, No. 5, Dec. 1986, pp. 1053-1075), historian;
இவரின் நூலிலிருந்து

- ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாட்டை (தனிப்பட்டதும் குழுவாகவும்) ஏற்படுத்துவதுடன் பால்நிலை வேறுபாடானது பால்நிலை கோட்பாட்டுச் சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- பால்நிலை வேறுபாட்டுக்கிடையேயான இடைவெளி சமூக உறவுகளுடன் தொடர்புபட்டதாக அமையும் (சமூக வாழ்வின் கோட்பாட்டை உருவாக்கும்) மற்றும் பால்நிலை வேறுபாடு ஓர் பகுப்பாய்வுப் பகுதியாகும்..

இப்பகுப்பாய்வு பின்வருவனவற்றின் அடிப்படையில் அமையும்
1. அடையாளங்கள்
2. நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள்
3. அடையாளக் குறியீடுகளின் விளக்கப்படுத்தல்கள்

இதை நாம் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்?
1. உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் பிரச்சினைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யவும்;. இதில்; பால்நிலை பாரபட்ச நிலைப்பாடுகளும் தாக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
2. பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
3. பால்நிலை தொடர்பான விழிப்புணர்வும் வேறுபாட்டுத் தன்மையும் எமது சமூகத்திற்கிடையே அதிகரிக்கப்பட வேண்டும்;.
4. பால்நிலை பகுப்பாய்வை உங்கள் வேலைத்தளங்களில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நடைமுறைப்படுத்தவும்.

இது ஒரு பகிர்தல். ஒரு பயிற்சிப்பட்டறையின் போது பெற்றுக்கொண்ட விடயம். பால்நிலை சம்பந்தமான உங்கள் கருத்துக்களை பகிருங்கள் முடிந்தால்.விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

Friday, November 19, 2010

சிதறும் சில்லறைகள் - 07(பெரிதுவத்தல்)

இன்றைய நாள்:
மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இவர் இலங்கை ஜனநாயக குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக பதவியேற்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்திருக்கிறார்.

திருக்குறள்

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.(67)

விளக்கம்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.

தன்னிலை விளக்கம்

இக்குறள் என்தந்தை கற்றாரோ என்னவோ இல்லை. ஆனாலும் தமது பிள்ளை தன்னை விட கற்று சமுதாயத்தில் விஞ்ச வேண்டுமென்ற அவா ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் உண்மை உணர்வு. அப்பாவும் என் குடும்பமும் என்னை ஒரு கற்றவனாக்குவதல் சில வெற்றிகளைக்கண்டாலும் என்விருப்பத்தை அவர்களுக்காக விட்டுக்கொடுப்பதில் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதில் எனக்கு அதீத விரும்பம் கொண்டவனாய் இருப்பேன். ஆனாலும் அதிகளவில் பயன்பாடுகளில் சிக்கலைத் தோற்றுவிக்கும் அல்லது மூடநம்பிக்கைகளை களைவதிலும் அவர்களுக்கு அவை பற்றி தெளிவுபடுத்துவதிலும் ஒருவனாக இருப்பேன். அப்படியே எனது விருப்பமான தனியார் துறைவிடுத்து அரச துறைக்கு முதன் முதலாக இணைகிறேன். இது கூட என் தந்தை ஆசைப்பட்டு நுழைகிறேன். என்னை எப்படியோ அரச உத்தியோகத்தில் சேரு என்று முணுமுணுத்து அவர் விருப்பத்தை நோகடிக்காமல் இருப்பதில் பெரும் மகிழ்ச்சியுறுகிறேன்.

பாடல்

நான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடன் என்னை நனைத்துவிட்டுப்போன இப்பாடல்
இப்பொழுதும் அப்பாவுக்காக கேட்கிறேன்.



தேன் கிண்ணத்திலிருந்து

கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு
உயிரிருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீர்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், கார்த்திக்


புத்தகம்

இப்பெல்லாம் புத்தகம் என்றாலே உசிரு. படிக்காவிட்டாலும் வாங்கிக்கொள்ளவேண்டுமென்று ஒரு ஆவல். நான் படிக்காமல் போனாலும் யாராவது படிக்கட்டும் என்று உள்ளுணர்வு.
அண்மையில் சுஜாதாவின் மீண்டும் தூண்டில் கதைகள் படித்தேன். அதில் பத்துக்கதைகள் அற்புதமாய் எழுதிருக்கிறார் சுஜாதா அங்கே செல்போன்கள் பயனுள்ளவை,ஸ்டேடஸ், சென்னையில் மேன் ஹாட்டன் என்பன அவசியம் படிக்கவேண்டிய கதைகள்.

ஒரு ஸ்டேடஸ்'

"இன்பமும் துன்பமும் நிறைந்த வேதனையில்....
அழுதாலும் சிரித்தாலும்... வாழ்க்கை என்றே முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது"

ஒரு படம்
அண்மையில் திருமலை சென்றபோது செல்போனுக்குள் சிக்கிய படம்.

Tuesday, November 9, 2010

மாற்றம் வேண்டி

வேதனை வழங்கல்களாய்
எனக்கு
ஆறுதல்கள்
அங்காங்கே சில
புன்னகைகளுடன்

வரம்புளில் வழியும்
வாழ்க்கை

ஒரு மாறுதலுக்காக
மாற்றம் எனக்குள்
ஆயிரமாயிரம்
விதைகளை வளர்க்க
விருட்சங்களே
பொறுத்திருங்கள்
வேராகிறேன்

Friday, November 5, 2010

தேனூரானும் நாட்டாரியலும் (சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்)

தேனூர் எனும் பெயர் எங்கட ஊர் தேற்றாத்தீவுக்கு வரக்காரணமே கவிஞர் தேனூரான் தான். தருமரெத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஊர் மேல்கொண்ட இலக்கியப் பாசத்தால் இப்புனைபெயரை தனதாக்கிக்கொண்டார். இவரை தேனூரான் மாமா என்று சிறுவயதுகளிலிருந்து அழைத்து வருகிறோம்.இலக்கியத்தில் மிகுந்த வல்லமைவாய்ந்த இவரைப்பற்றிய பதிவு இது.

இவருக்காக நான் எழுதிய கவிதை கலாபூசணம் விருதுபடைத்தபோது; இங்கு காண்க.

கிழக்கிலங்கை தமிழ்பேசும் மக்களின் நாட்டார் வழக்காறுகள் (ஆய்வரங்கக் கட்டுரைகள்) என்ற புத்தகம் அண்மையில் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக அமையப்பெற்றதை ஒர் ஆவணப்படுத்தலாகவே உணரலாம். இதில் நாட்டாரியல் பற்றி பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளில், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் தொன்மையையும் நாட்டுவழக்காறுகளையும் தெளிவாக எழுச்சிபெறச் செய்திருப்பது மகிழ்ச்சி.


கிராமத்து மண்ணின் மகிமையை அதன் நாட்டுவழக்கை தொன்றுதொட்டு வரும் பண்பை தமிழின் தொடர்ச்சித்தன்மையை அதிகளவில் படம் போட்டுக்காட்டும் புத்தகம் அது. அதைவிட ஆவணம் என்றே சொல்லலாம். ஆனாலும் அங்கே குறை (சொல்ல வேண்டியது ).
இப்புத்தகம் பல்வேறு சமூகத்தையும் மக்களையும் சென்றடையும் நோக்கு குறைவாக இருக்கிறது.பல்கலைக்கழக அல்லது இன்னொரு ஆய்வாளர்களுக்காக மட்டும் இருப்பதாக உணர்கிறேன். காரணம் இப்புத்தகம் விற்பனைக்கு கிடைக்குமா என்பது சந்தேகப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய விழாவின் ஆய்வரங்கில் அறிஞர்களால் உணர்த்தப்பட்ட ஆய்வரங்கக்கட்டுரைகளையே இப்புத்தகம் கொணர்ந்திருக்கிறது. ஆனாலும் பல்வேறு ஆய்வுகள் கருத்தரித்தும் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் கர்ப்பிணிகளாய் இன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.
இப்புத்தகத்தினூடு எமது ஊரின் பெருமைசேர்க்கும் கவிஞர் தேனூரான் நாட்டார் அறிவியல் என்ற ஆய்வுக்கட்டுரையைத் தொகுத்துத்தந்துள்ளார்.

"ஒரு நாட்டான் நாட்டார் அறிவியில் பற்றி கூறுவது சிறப்பு, தான் உண்டவற்றை, உண்டு ரசித்தவற்றை அதனால் ஏற்பட்ட மகிழ்வை, பிறருக்குக் கொடுப்பது சொல்வது பொருத்தம், ஆண்டவனின் செல்வப்புதல்வர்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஏழையாயினும் சந்தோசச் செல்வம் பெரிதும் படைத்தவர்கள். அறிவியல் மேதைகள் தாம் பட்டினிகிடந்தும் தமது வீட்டுவாயிலில் வரும் விருந்தினர்களை இதயபூர்வமாக வரவேற்பார்கள். அழகிளராக இருந்தும் தமது அழகைப்பற்றி அகந்தை சிறிதும் அற்றவர்கள்......"
என்று முன்னுரைக்கும் போது நாட்டாரியலின் மேன்மை விளங்கும்.

வழமையான ஆய்வாக இல்லாமல் ஒரு வித்தியாசமான ஆனாலும் நாட்டாரியல் தொடர்பாக பல்வேறு அணுகுமுறைகளை சிந்தனைகளை கவிஞரின் எளிமைத்தன்மையைப் போலவே நுண்ணிய முறையில் தெளிவாக்கியிருப்பது அவருக்குரிய அந்த எழுத்தாற்றலை எல்லாருக்குமாக கொண்டுவந்திருப்பது தெளிவு.

நாட்டாரியலின் தொன்மையை எழுத்துலகில் தடம்புரளச்செய்வதில் இவருக்கு எப்போதும் பெருமையான விடயமும் இவருக்குரிய திறமையையும் வெளிக்காட்டுகிறது. பல்வேறு ஆய்வுகளுக்காக இவரின் துணையை நாடும் பல்கலைக்கழக பேராசியரியர்களும் மாணவர்களும் அவரிடமிருந்து தேனைப் பெற்று வெறும் கூடாக இவரைப் பார்ப்பது நமது மனதுக்கு கவலையாகவும் வெட்கப் படவேண்டிதொன்றாகவும் காணப்படுகிறது.
தமிழ் இலக்கிய விழா - 2010 சிறப்பு மலர் கிழக்குமாகாண கல்வி பண்பாட்டல்வல்கள் அமைச்சின் வெளியீட்டுநூலிலும் நமது மண்ணின் சிறப்புப் பேணும் மட்டக்களப்பு பிரதேச சடங்குசார் கூட்டுக்கலை வசந்தன் - கொம்புமுறி என்ற தலைப்பில் வசந்தன் கூத்து மற்றும் கொம்புமுறி விளையாட்டு என்பற்றை கலைநுட்பத்தின் வெளிப்பாட்டாக அற்புதமாக எவ்வாறு இக்கலைகள் நடைபெறுகிறது என பல்வேறாக ஆய்வெடுத்து எடுத்துரைக்கிறார். கொம்புமுறி விளையாட்டு எமது ஊரின் பெருமைசேர்க்கும் பழைமையான விளையாட்டு ஆதலால் தான் எமது கிராமத்தின் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் பெயரானது கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் என்று. அத்தோடு மட்டுமில்லாது வசந்தன் கூத்து என்ற எமது மற்றுமொரு பாரம்பரிய ஆடல்வகையைபற்றிய எழுத்தாடலும் அருமையாக விளக்கி எழுதியுள்ளார்.
(அண்மையில் எமது கிராமத்தின் பாலமுருகன் கோயிலுக்கு பால்குடபவனி விழா நடைபெற்றபோது கவி தேனூரானும் வசந்தன் குழுவின் சில பாலகர்களும் பவனிவரும் போது)

ஆனாலும் வறுமையும் புலமையும் சேர்ந்திருப்பது இவரது வாழ்க்கைக்கும் பொருத்தம் என்பதற்கு இவரும் ஒரு சான்று. வசந்தன் கூத்துப்பற்றிய அச்சேற்றப்படாத பல்வேறு ஆய்வுகள் கட்டுரைகள் இன்னமும் கையெழுத்துப்பிரதியாக்கி வைத்திருப்பது மகத்தானது.

அவற்றுள் ஆய்வுப்பார்வையில்.....
  • வசந்தன் பாடல்கள் - என்ற கையெழுத்துப்பிரதியில் வசந்தன் எனும் பெயர் வரக்காரணம், தோற்றப்பின்னணிச் சுருக்கம், கண்ணகி இலக்கியங்கள், வசந்தன் பாடல்களின் அமைப்பும் கண்ணகி வழிபாடுகளும், வேளாண்மைச் செய்கையில் வசந்தன் என்று பல்வேறு அங்க இலக்கணங்களை வசந்தன் பாடல்கள் தாங்கி நிற்கின்றன.
  • வசந்தன் கூத்தின் தோற்றமும் வரவாற்றுப்பின்னணியும். - இதில் வசந்தன் கூத்தின் தோற்றம் மற்றும் சமூகப்பின்னணி, கொம்புமுறிச் சடங்கு, வசந்தன் கூத்தின் தற்கால நிலை என்று கூத்தின் தொன்மையும் தன்மையும் தற்கால நிலைமையும் என்று எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்தின் அளிக்கை முறை - இங்கு தேற்றாத்தீவு மற்றும் வந்தாறுமூலைக் கிராமங்களில் வசந்தன் கூத்தின் அளிக்கை முறைபற்றிய ஆய்வாக எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்துப்பற்றிய ஓர் நோக்கு - இதில் களுதாவளைக் கிராமத்தினை மையமாகக் கொண்டு ஆய்வாக்கப்பட்டுள்ளது.
  • வசந்தன் கவிகள் - என்ற நூலாக்க்படவேண்டியதில் பராக்கே, ஊஞ்சல், தானானாப் பள்ளி, பிள்ளையார் வசந்தன், கள்ளியங்கூத்து, கூவாகுயில் வசந்தன், செவல்வாட்டு வசந்தன், அனுமான் வசந்தன், நாடக வசந்தன் என அத்தனை வசந்தன் பாடல்களும் கையெழுத்தாக்கப்பட்டுள்ளது


தேனூரான் பல்வேறு இலக்கியத்துறைகளில் துறைபோந்தனனாக இருக்கிறார். இயல், இசை , நாடக, மாந்திரிக, நாட்டு வைத்தியம் என்று பலவாறு திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகள் பெற்றாலும் பெருமை என்பது சிறிதுமின்றி பேரெடுக்கப் பிறந்தாலும் இலக்கியம் என்பது ஒவ்வொரு கலைஞனாலும் பயணிக்கக் கூடிதாக இருந்தாலும் அவனது ஆக்கங்கள் நூலுருப்பெறுவதில் பெருதுவைக்கும் இன்பம் அந்தந்த கலைஞனுக்கே சிறப்பு மட்டுமல்லாமல் இலக்கியத்தின் தொடர்ச்சித் தன்மைக்கும் தமிழின் நீடித்து நிலைபெறுதலுக்கும் அவசியம்.

செம்மொழித் தமிழினிச் சாகாது என்றால் ஒவ்வொரு கலைஞனின் படைப்புக்களும் வெளிப்படுத்த வேண்டும். நூலுருவாக்கம் என்பது ஆவணப்படுத்தலின் உச்சம். எனவே இந்தப் பண்படுத்தப்பட்ட தமிழ் நிலத்தை நூலுவாக்க முயற்சிக்கும் போது தமிழ் தாய் பல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாள் என்பது திண்ணம்.

இவரின் படைப்புக்களில் சில அச்சேற்றப்படாமலும் அச்சேற்றி சில மீள்பதிப்புக்கு ஆளாகமலும் என..

  • "மட்டக்களப்பின் கிராமியக் கலைகள்"
  • "நாட்டார் கலையில் காவடியாட்டமும் இந்துகலாச்சாரமும்"
  • "மட்டக்களப்பின் மாந்திரிகைக்கலையும் ஒரு கிராமியக் கலையே"
  • "தேற்றாத்தீவு பாலமுருகன் பாமாலை"
  • "களுதாவளைப்பிள்ளையார் அற்புதப் பொன்னூஞ்சல்"
  • வடமோடி தென்மோடி கலந்த பரிசோதனையாக "அகலிகை" என்ற நாட்டுக்கூத்து

என்று இன்னும் பல எனக்குத் தெரிந்தவை பற்றி சொல்லுகிறேன். 2003 இல் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவை வெளியிட்ட "தேனகம்" என்ற நூலில் கூட "மட்டக்களப்பில் பறையர் சமூகம்" என்ற ஆய்வுக்கட்டுரை அவரின் சமூகவெளிப்பாட்டின் எழுச்சியை எடுத்தியம்புகிறது.

பல்கலைக்கழக மட்டத்தில் நோக்கும்கால் இவருக்கு எத்தனையோ பட்டங்கள் வழங்கலாம். ஏன் கிழக்குப்பல்கலைக்கழகம் இவரின் பல கட்டுரைகள் உட்பட பல்வேறு ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறதை மறுக்க முடியாது. ஆனாலும் பல்வேறு நூல்கள் படைக்க எத்தனிக்கும் இந்தக் கிராமத்துக்காரனினால் நூலுருவாக்கம் செய்யமுடியாமல் போவது கிராமத்துக்கலைகள் பண்பாடுகளின் வெளிச்சம் என்பவறை இழந்து இருப்பது மனவேதனை தரும் விடயம்.
இதுவே தான் சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்.

இவர் பற்றிய இன்னும் பல சிறப்புக்களை பிறிதொரு பதிவில் எழுதுவதற்கு ஆவலாக இருக்கிறேன். நான் இவர் பற்றிய வீடியோ மற்றும் ஆவணப்படுத்தலாக ஆரம்பித்திருக்கிறேன். இவர் போன்று இன்னும் பல இலைமறைகனிகளான பழம்பெரு இலக்கிய சமய கலாசார மூத்தவர்களைப்பறிய ஆய்வு எழுத ஆவலாக உள்ளேன். காரணம் இருக்கும் போது வாழ்த்தவேண்டும் அவர்களுக்கு புகழ்சேர்க்க வேண்டும் அவர்கள் திறமைகளை மெச்சவேண்டும். இறந்தபின் இவர்கள் பேசப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்ற முனைப்போடு....

யாராகினும் நூலுருவேற்ற விரும்பினால் கிராமத்துக்காரனின் படைப்பை ஆவணப்படுத்த முனைந்தால் தமிழுக்குச் செய்யும் ஒரு தொண்டாக இருக்கும் என்பது உண்மை.

Friday, October 29, 2010

தெருநாடகம்

"நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா...." பாடலை பக்கத்துவீட்டு வானொலிப்பெட்டி பாடிக்கொண்டிருக்க. அவன் கண்களைக் கசக்கி உசுப்பி விட்ட இந்த பாடலுடன் ஆரம்பித்த அந்த நாள் மகேஷ்க்கு அர்த்தப்படாத நாளென்றே தோன்றி எழுந்தான். இவன் பிறந்து வளர்ந்து படிச்சிக்கொண்ட காலங்களில் மகிழ்ச்சி என்பது தொலைதூர நிலாவாகவே அவன் நினைவுகளுடன் விதியானது.

அவன் எவ்வளவு கஸ்டப்பட்டு முன்னுக்கு வர நினைத்தாலும் அவனை ஏதோ ஒன்று பின்னுக்குத் தள்ளுவதாய் உணரலானான். படிச்ச காலங்கள் அதிகம். வாழ்க்கையைப் படிக்க முடியல என்ற ஏக்கம். யாரையும் பார்த்தா அவங்களா இல்ல இவங்க நம்மளப்போலயா.. என்று ஏதோ ஒன்று அவனா அவன் கேட்டுக்கொண்டு. வாழ்க்கையை வாழ முடியாம வரம்புகளைப்பற்றியே யோசிக்கலானான்.

இருந்தாலும் மூங்கில் காட்டையே மூழ்கடித்துவிடும் அந்த புல்லாங்குழழகி அவனுக்குள் வராமல் இருக்க அவன் என்ன காவிநிறத்திலா மனசை உடுத்தி வைத்திருந்தான். அதே அந்த பதின்ம வயது கீறல்கள் மகேஷின் மனதில் அந்த அவள். ஒரு சொட்டுக்குறைவும் இல்லாமல் நனைத்துவிடும் மழையைப் போல அவள் பார்வை அவனை ஒவ்வொருநாளும் உசுப்பிவிட்டுப்போகும்.
அவளுக்கு இந்த வரிகளைச் சொல்லணும் போல இருக்கும் மகேஷ்க்கு

"உன்னோடு பழகும் வருஷங்கள்
பழம் நழுவி விழுந்த
'பால்'ய பருவங்கள்

உன்னைப் பிரித்துப்பார்க்க முடியவில்லை
உனக்கு மட்டும் எப்படி முடிகிறது
என்னை விட்டுவிட்டு போக"


என்னை எடுத்துக்கொண்டு போவதாய் உணர்கிறேன் என்றவளை எப்படியோ இல்ல, காதல் காதலாகணும் அது ஜெய்க்கணும் என்ற ஏக்கம் கொண்டவனாய்.

சீனியில்
மொய்க்கும் ஈக்களாய்
உணர்வுகள்
தின்னப்படுகிறது
கட்டிக்கொண்டது
கற்றுத்தரவில்லை


அவன் அடிக்கடி வரிகள் விதைக்கும் கவிதைக்கும் தாயாகினான் அந்தப்பொழுதுகளில்.
ஆனால் சனா இதைக் கண்டுக்கவில்லை. அவள் நண்பியிடம் சொல்லி அனுப்பிவிடுகிறான்.
"காதல் கிறுக்கிறான் மகேஷ், சனா காதலித்துவிடு" என்று விண்ணப்பிக்கிறான்.

அப்போதும் வழமையைப்போல் அவனுக்குள் அந்த எதிர்மறைச்சின்னங்கள் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டு. "அவள் கிடைக்காமல்போனால் நான் என்னாவேன். அவள் கிடைக்கமாட்டாள். நான் யாரென்பதை அறிந்தால் சனா விட்டுவிடுவாள் என்னை. என்னை யாரென்று சொல்லியே ஆகணுமா இல்லை சொல்லாமல் போனால் பிறகு ஒடிந்து போவாளா?? நான் ஏன் பொறந்தேன்? இன்னும் நான் வாழவேணுமா,,?"
பாவம் வரம்புகள் வளர்ந்த மனிதர்களிடையே இவன் ஒரு வளர்ந்த நெல்லினம். பூசைக்குபோகாத பூவாய் கோயிலுக்கு வெளியில் வாழுகிறான். ரோசாச் செடிகளுக்குள் ஒரு அரளிப் பூ தான் தானென்று யோசிக்கலானான். தொடர்ந்து வேதனை ஏன் பொறந்தேன் என்று வாழ்க்கையை வெறுப்போடு பார்க்கலானான்.

சனா அவனை அவன் குடும்பத்தையும் அவன் வாழிடத்தையும் அறிந்துகொள்கிறாள்.
"மகேஷ் நீ நண்பனாகவே இரு. அதுக்கு மேல யோசிக்காத உனக்கு இது பற்றிச்சொல்லத்தேவையில்ல. தெரியும் தானே" என்று முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறாள். காதல் முற்றுப்புள்ளியானது. இல்ல சூனியமானது வாழ்க்கை நரகமானது. மகேஷ் மனதில் பாரம். இதயத்தில் ஓட்டைகள். கண்களில் ஈரம்.

ஆனாலும் அவன் வெற்றிகரமாக கடினப்பட்டுப் படிச்சதால பல்கலைக்கழகம் செல்கிறான். அங்கே வாழ்க்கையின் கோலத்தை மாற்றலாம். வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவேன். நான் என்ன மனிதன் தானே என்று மனக்குமுறல்களை கொட்டிக்கொண்டு சனாவுக்கு விடைபகருகிறான். அவள், வீட்டிலே அடுத்தமுறை கெம்பஸ் (பல்கலைக்கழகம்) போவேன் என்று மறுபடியும் உயர்தர பரீட்சைக்காக படிக்கத் தொடங்குகிறாள்.

மகேஷ் பல்கலைக்கழகத்தில் மிக ஆவலாகவும் அறிவானவனாகவும் சதம் சதமாய் முன்னேறுகிறான். அங்கேயும் தனது படிப்பை மட்டும் நம்பி வாழ்க்கையின் தனது அடுத்த இருப்பைப் பற்றி சிந்திக்கலானான். அங்கே ஒரு சாலையில் தனியே அவன் உலா வருகையில் அந்த வரிகள் கண்ணில் பட்டது.

நீ வீசிய பந்து நோபோல் என்றால்
உன்னுடைய ஓவர் ஒவரா
மறுமுறை பந்து வீசு
விக்கட்டை வீழ்த்தலாம்
இக்கடடைத் தீர்க்கலாம்
.......கவிஞர் வாலி..........

இந்த கவிதைவரிகள் அவனுக்குள் இன்னொரு பரிணாமத்தைக் காட்டிவிட்டது. ஆனாலும் அவன் தனிமையை அடிக்கடி அசைபோடும் ஒரு உளறல்காரன். இது அவன் விரும்பிக்கொண்டதல்ல அவனது குடும்பம், குடும்ப வர்க்கத்தில் பிறந்ததால் ஏற்பட்ட ஒன்று. அவன் அவற்றிலிருந்து விடுபடவேணும். மாற்றம் வேண்டும் உலகில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று சாணுக்கும் முழத்துக்குமாய் மனசில எண்ணிக்கொண்டு....
பல்கலைக்கழகத்தில் மூணு வருசம் ஒன்றாகப்படித்து பழகிய மீராவின் மீது தனது ஈர்ப்பை இனங்காணுகிறான். நரகம் கொண்ட வாழ்வு சொர்க்கம் என்ற மாறுதல் கிடைக்கும் என்ற அசயாத நம்பிக்கையில் கால்கோள் இடுகிறான் கல்யாணத்தில் வாழ்க்கை ஆரம்பிக்க வேலையும் கிடைச்சது கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியும் அவனை மீண்டும் அவனாக்கிய அந்த வாழ்க்கை இன்பநுகர்ச்சியையும் தந்தது மகேசுக்கு. ஆனாலும் அந்த வேலை அவனுக்கு தேவையா என்று பிறகு மீண்டும் எதிர்மறையான சிந்தனைகள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன...
இப்ப கூட அவன் பிழையாக நினைப்பது அவனது வேலையல்ல அவன் வேலைசெய்த இடம் அவன் குடும்பத்தை பிரிந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம். அங்கே அவனுக்கு கிடைத்த மாறுதலான உணர்வுகள். மீண்டும் தனிமை என்ற நிலைமை. வாழ்க்கை வெறுத்த அவன். கடவுளை காணவேணும் அல்லது. கடவுளைக்கொல்லவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் உருப்பெற்று வழிப்பெற்றுக்கொண்டிருக்க. அவனறியாமல் அவன் யாரையும் சந்திக்க முடியாமல் சந்திக்க விரும்பாமல் உலகின் எவ்வளவோ இன்பங்களையும் சந்தோசங்களையும் புதைக்கலானான். தனிமை என்ற நிலைமையில் அவனைத் தள்ளினான் அவன்.
அவனுக்கு ஏதோ பேய் பிசாசு சூனியம் பிடிச்சிருக்கு எண்டு பூசாரிக்கிட்ட பரிகாரம் தேடிச்சென்றனர் மீராவின் குடும்பத்தினர். இருந்தபோதும் மீரா இதையெல்லாம் ஒரு நம்பாமல் தனது கணவனக்கு என்ன ஆச்சு என்பதை அறிந்தால் கணவனின் பிரச்சனையை தான் அல்லாமல் வேறொருவர் மூலமாக அறிந்தால் அதற்கான தீர்வை எட்டமுடியும் என்று நம்பினாள். ஆனால் அவளுக்கு யாரைப் இதற்கு உதவிக்கு கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள். உண்மையில் மகேஷைவிட மீரா இப்போது அதிக மன உழைச்சலுக்கு உள்ளாகினாள். பாவம் அவள் என்னசெய்வது என்று தடுமாறும் போதேதான் அந்த தெருநாடகம் மட்டக்களப்பு நகருக்கு அவள் அன்று செல்லும்போது அரங்கேற. அங்கே ஒரு துண்டுப்பிரசுரம் அவளுக்கும் கொடுத்தார்கள் கிழக்குப்பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் மாணவர்கள். அவளுக்காகவே அந்த நாடகம் அரங்கேறியதாக மீரா உணர்ந்தாள்.
அந்த துண்டுப்பிரசுரம்



பூசாரிய நம்புறத்த விட சாமிய கும்பிடலாம் என்பது சரியாய் பட்டது மீராவுக்கு. அவள் மகேஷ ஒருவாறு சம்மதிக்கச் செய்து உளவள நிலையத்துக்கு கூட்டிக்கிட்டு போனாள். அங்க ஆலோசனையும் வழிகாட்டலும் மகேஷ்க்கும் அவருக்கு உரிய மருத்துவசிகிச்சைகளும் முறையே வழங்க மகேஷ் நல்ல நிலையடைந்தான்.
மீரா இப்பதான் யோசித்தாள் மகேஷ் தற்கொலைசெய்ய முயற்சித்தபோது தடுக்காதிருந்தால் தனது வாழ்வும் மகேஷின் வாழ்வோடு முடிந்திருக்கும் எண்டு கண்ணீர்சொரிய மகேஷ் அவளை ஆரத்தழுவி நான் நானாகிட்டேன் நாம் ஏன் கலங்கணும் என்று சொல்ல அந்த தெருநாடகத்தை பார்க்கணும் போல ஒரு ஆர்வம் மகேஷ் மனதில்.....

Sunday, October 24, 2010

இரங்கற்பா

தேற்றாத்தீவைப் பிறப்படமாக்கி வாழ்வாக்கிய
அமரர்.கிருஷ்ணப்பிள்ளை அற்புதநாதன்
அவர்களின் மறைவுக்கு
இரங்கற்பா


இந்து இளைஞர் மன்றமதில்
முன்னாள் உறுப்பினன் நீ
சைவத்துக்காய் எந்நாளும் ஆன நீ
விட்டுபோனாயே... அற்புதா
பரிதவிக்கிறோம் பாருமையா..

இனிவருங்காலம் பாதயாத்திரையில்
ஒரு இடைவெளி – அங்கு
உன் இழப்பு எப்போதும் பேசப்படும்

எத்தனை படைப்புக்கள்
கட்டடச்சிற்பங்கள்
கொம்புச்சந்தியான் சந்நிதியில்
அத்தனை சப்தங்களையும்
உயிர்ப்புள்ள தூணாய்
மொழிபெயர்க்க ஆனாய்
இன்று
உன் கடைசி நிசப்தத்தால்
மரணிக்கச்செய்துவிட்டாய் எம்மை

காலை மதியம் மாலை
பிள்ளையார் கோயிலடி 'அற்புதம்'
உன் திடுக்கிட்ட பேச்சு
தித்திக்கும் நேர்மை
முன்னிற்கும் ஆளுமை
நெஞ்சில் நிலைக்கும்
விட்டுப்போனாயே அற்புதா!!!

அற்புதா இன்று நீ இல்லை
ஊமையாகிறது தவிலும் மணியும்
சங்கு மட்டும் சப்திக்கிறது
நெஞ்சம் நெகிழ்கிறது
கண்கள் பொழிகிறது

அனேகமாக மரணம் வந்துதான்
வாங்கிக்கொள்ளும் - நீதான்
மரணத்தை வாங்கியவன்

ஊரின் எந்த மூலையில்
மரணம் பேசப்பட்டாலும்
உன்பாதங்கள் பயணிக்கும்
நீ போகாத மரணவீடுகள் ஏது?
அதுதான் அதிக கால்தடங்கள்
உன் மரணத்தில்......

கோயில் கோயிலடி ஆகினயே
கோயிலான் வான்வாசல் சேர்ந்தாயோ!!
கண்ணுக்குள் கருத்தாய் ஆயினயே
கண்ணீரில் மிதக்க விட்டாயே!!

கண்களை உதிர்த்துவிட்டுப்
போகிறாயே
நெஞ்சில் நினைவுகளை
சுமக்கிறோம் நாம்

வியர்வைகள் விதைத்து
பிள்ளைகள் வளர்த்தாய்
விளைநிலம் தரிசு நிலமாகிறது
நீ எம்மை விட்டுப் பிரிகையிலே..

உன் ஆத்மா சாந்தியடையட்டும்
திருச்சிற்றம்பலம் ஓதிய நீ
கொம்புச்சந்தியான் பாதம்
சேர பிராத்திக்கிறோம்...
அஞ்சலிக்கிறோம்...

Wednesday, October 20, 2010

ஈரத்தை உடுத்திக்கொள்கிறேன்

உன் பருவ மாறுதல்களில்
அதிகம் ரசிப்பது
என் மேல் படரும்
உன் கால்தடங்களை

என்னை நனைக்கும்
நீ
உன் முழுவல்*
நான் யாசகன்

உனது வருகையை
உறுதிப்படுத்தும்
ஆயிரம் வாற்று
மின்
இலத்திரன் பாய்ச்சலின்
சப்தங்கள்
கண்கள் நிசப்தத்தில்
உன் வருகை பார்த்து

உலர்த்தி வைத்திருக்கிறேன்
உடலையும் உள்ளத்தையும்
வா வந்து
ஈரப்படுத்து
ஒவ்வொரு முத்தத்தால்

உனது கண்ணீரில் மட்டும்தான்
நான் காணாமல் போவேன்

எங்கள் விளைநிலம்
விதையாகும் உயிர்
பயிராகும்
பயிர் உயிராகும்

ஒரு சொட்டுக் குறைவில்லாமல்
என்னைக் கழுவி விடு
மனது இலேசாகும்

உன் பருவ மாறுதல்களில்
உன் கால்கள்
என்மேல் படரணும்
எங்கள் விளைநிலத்தில்
நீ வேரூன்றவேண்டும்



(*முழுவல் - தொர்ந்துகிடைக்கும் அன்பு)

Tuesday, October 19, 2010

தாய்மையின் தாகம்


தலைவலி
அழுகின்ற நான்
தேசிக்காய்த் தேனீர்
சுடுசோற்று ஒத்தடம்

மடியினில்
முகம்புதைக்க
உன் கரங்களில்
என் கண்ணீர் துளிகள்

உச்சிமோந்துவிடும்
உன்முகம்

இல்லை என்று
நான் வெளியில்
தனிமையில்

உன் இடைவெளி
எனக்கு
தலைவலி

ஐந்து நாட்கள் பிரிவு
வாசல் கதவு திறக்க
வீடு சிரிப்பை
வர்க்கித்துக்கொண்டது

கடவுள் தேடி நான் வர
அம்மா கோயிலில்
அர்ச்சனை
என் நட்சத்திரத்தில்

காத்திருக்கிறேன்
சாமிவரும்வரை
வெறும் தேனீர் கோப்பையுடன்

Sunday, October 17, 2010

காவி நிறக்காதல் கொடிமர வேர்களில்

மீண்டும் காதல் என்ற சங்கீதத்தில் சில சுருதிகளை மீட்டுப்பார்க்க வேண்டும் என்ற உணர்வு. வாழ்க்கையை வாசித்த யாசித்த பண்பாட்டு மாற்றங்களை தன்பாட்டுக்குள் கொண்டுவந்த அந்த சாமி. காதலை மறப்பதற்காக ஒரு கோழைத்தனமாய் தன் காதலி பிரிகிறாள் என்ற எண்ணத்தில் காவியுடுத்திய காதலன் அந்த சாமி.

தன் கண்முன்னமே தன் காதலி யாருக்கோ மனைவியாகிவிடுவாள் என்று எண்ணி தாங்கொணா துயரம்தலையில் அழுத்த சாமி தேடி சாமியாகிறான். ஆனால் அங்கே யாரை மறக்கவேண்டும் மனதில் பதிந்த அந்த முகத்தை அழிக்க அழிக்கவேண்டும் என்று எண்ணி காவியுடை தரித்தானோ அதே அவளைத் தவிர அவள் முகத்தைத் தவிர அவன் பிரார்த்தனையும் மறக்க முடியாத தன்மையும் நின்று அவனை உலுக்கி எடுத்தது. முடியாமல் மீண்டும் மலையிலிருந்து காட்டிலிருந்து அந்த காவி இறங்குகிறது. கொடுமை என்னவென்றால் அதே உடையில் சில சில்லிடும் சிலிர்ப்புக்கு அந்த பழைய நினைவுகள் மட்டும் நிலைத்து நிற்க அந்த பழைய இடமும் புளிக்காத காதல் என்ற உணர்வும் மட்டும் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் 18 வருசங்கள் கடந்த பின்னும் இன்னும்.......

பாவம் காதல் காதலிக்கவிடவில்லை இல்லை காதலித்த காதல் வாழவைக்கவில்லை அந்த சாமியை. பச்சைக் காடுகளில் பச்சையானவர் இங்கு பழைய இச்சைக்கான காதலை கச்சையில்(காவியில்) தேக்கிக்கொண்டு அலையலையாய் புதிய மாற்றங்களையும் ஒவ்வொரு நிகழ்கால நிகழ்வுகளையும் கடந்தகால அவரது நிஜங்களையும் ஒப்பிட்டு காதலிக்கிறார் இப்போதும் அந்த பழங்காதலை.

இடம் மாறி தடம் மாறி இந்த சமூக மாற்றங்களின் வாசனை நுகரும் இந்த சாமியின் மனதில் இன்னும் மாறாத அந்த "மதுபாலா" என்ற அழகிய காதல் மட்டும் மாறாமல் ஒலித்துக்கொண்டிருந்தது.
"காணாமல் போயிருப்பாளா
நான்
காணாமல் போனதால்
ஆகாமல் போயிருப்பாளா"
ஏங்கிக்கொண்டு அவளைத் தேடித்தேடி அலைகிறது இந்த காவி. பவ்வேறு மாற்றங்கள் ஆனாலும் தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தன் காதலின் அடிச்சுவட்டு ஆதாரங்கள் கிடைக்கிறது இந்த சாமிக்கு.
அப்படியே தானும் தன் பள்ளித்தோழனும் மாட்டிக்கொண்ட ஒரு காட்டுக்குள்ளே மீண்டும் அந்த காதல் நதி விளையாடிக்கொண்டிருக்குது.
"சந்தித்த சில நொடிகள்
சங்கடமான பொழுதுகள்" இருவருக்கும் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரானவர்கள் இப்போ இருவரானவர்களாக நினைத்துக்கொண்டு அந்த சாமி கதறியழும் காதலில் தெரிந்தது.
அப்போது அந்த நிசப்த அலைவரிசையில் சில நிஜங்கள் வெளிக்கொணரப்பட்டது
"... என் வாழ்க்கையில் காதலங்கிறது இறந்த காலம். உங்களை நான் காதலிச்சது நிஜம்; ஆசைப்பட்டது நிஜம்; அழுதது நிஜம்; பிரிஞ்சது நிஜம்; கரைஞ்சது நிஜம்; எல்லாம் இறந்த கால நிஜங்கள். வாழ்க்கையை உணர்ச்சிமயமாப் பார்க்கிற காலம் முடிஞ்சு போச்சு. இது அறிவுமயமாய் பார்க்குற பருவம்" என்று அழுத்தமாக்கிய அவள் குரல்
........"நீங்க திரும்பி வரலேன்னா எனக்கு வாழ்க்கை இல்லேன்னு நெனச்சன்" ... "நீங்க திரும்ப வந்தாலும் உங்களுக்கு வாழ்க்கை இல்லேன்னு நெனச்சன்" என்று முற்றுப்புள்ளி வைக்காமல் வைத்த அவளை கண்களால் கழுவிய கண்ணீரை உதிர்த்திய சாமிக்கு அவள்
" காதல்ங்கிறது காதலிக்கிறது மட்டுமில்ல இளங்கோ! காதலை நிறைவேத்துறது. உங்களுக்கு காதலிக்க மட்டும்தான் தெரிஞ்சது. காதலிக்க மட்டும்தான் முடிஞ்சது; நீங்க பாதிக்காதலன்."
என்று அறிவுரை வழங்கிய அங்க ஒரு யுத்தமே நடந்தேறியது.
கடைசியில் சாமியாரின் தோள்களில் தொக்கியுள்ள குழந்தைக்கு அவள் தாய்மையின் தவிப்பில் "போய் வருகிறேன் கண்ணே! இல்லை ஜென்மங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்யை. போகிறேன் கண்ணே! என்னைச்சுமந்த மண்ணே!......என் இளமையின் பெரும் பகுதியை மயக்கத்தில் வைத்திருந்த மாஜி காதலரே! என்னை நோக்கி மரணம் அல்லது மரணத்தை நோக்கி நான்..." சில வினாடிகள் மெளனம் சாமியாரின் உள்ளத்தில் ரணம் கண்களில் கண்ணீர் வெள்ளம்.

இவ்வாறு அற்புதமாக காதலும் சமூகமும் என்ற கட்டமைப்புக்குள் கற்பனைச் சாமியையும் காதலையும் கதையாக்கிய கவபேரரசு வைரமுத்து அவர்களின்
காவி நிறத்தில் ஒரு காதல் என்ற புத்தகத்தைப் படித்தேன். பகிர்ந்துள்ளேன்.
இது 1991 இல் அவர் பதிப்பித்த புத்தகம்


இப்போ வைரமுத்து அவர்கள் 1983 காலப்பகுதியில் எழுதிய கவிதை இரண்டும் என்னை ஏதோ செய்தது. கவிதையில் காதல் கதையில் காதல் அற்புதப்படைப்பு கட்டாயம் வாசியுங்கள் இரண்டு புத்தகங்களையும்.


துப்பாக்கி எப்போது பூப்பூப்பது


அன்பனே
உன்
தோழியைவிட
துப்பாக்கியை நேசிக்கும்
தோழனே

என்னோடு
மெழுகுவத்திகளும்
அழுதுகொண்டிருக்கும்
இந்த
மெல்லிய இரவில்
கடிதத்தில் விழும் என்
கண்ணீர்ச் சொட்டு

கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?

நாங்கள்
நட்சத்திரங்களைப் பார்த்து
நாளாயிற்று
எங்கள் வானத்தைப்
புகைமண்டலம்
போர்த்திருக்கிறது

மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்

அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை.

காதலா
நீயும் நானும்
ரகசியமாய் நடந்து போகும்
ராத்திரிச் சாலை
இப்போது -
வெடிகுண்டுகளின்
விதைப் பண்ணையாகிவிட்டது

மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.

இனியவனே
என்
வாலிபத்தை
வாசித்தவனே

உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது?

இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?

ஆனால்
என் தலையணையருகே
சில
உலகக் காவியங்களும்
உன் நினைவுகளும் தவிர
ஒன்றுமில்லை.

இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை

ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.

கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை கொடிமரத்து வேர்கள் என்ற புத்தகத்தொகுப்பிலிருந்து.

அக்டோபர் மாதம் வாசிப்பு மாதம் ஆகையால் வாசியுங்கள் கதையும் கவிதையும் உங்களுக்குள்ளும் உணர்வு பீறிட்டு இதயச்சுவர்களின் சில கிறல்களில் காதல் தெரியும். காவியம் தெரியும்.
கனக்கும் இதயம் கொண்டு விடைபெறுகிறேன் சில் திருப்திகளுடனும் திருத்தப்படவேண்டிய தீர்ப்புக்களுடனும் தமிழனாய்

Saturday, October 16, 2010

சிதறும் சில்லறைகள் - 06 (வழியும் வலியும்)

இன்றைய தினம்

நவராத்திரி விழாவின் இறுதிப்பொழுதுகள் அன்னை சரஸ்வதிக்கு பூஜை பண்ணும் கடைசிப்பொழுது.
நான் வீட்டுக்கு வெளியில் ஒரு பயிற்சிப்பட்டறைக்காக இருப்பதால் இந்த உல்லாச விடுதியில் எப்படி இத்தினதைக் கடப்பது. ஆயினும் வாழ்நாளில் கடைப்பிடித்து வந்த முறைமையின் படி மனதை ஒருமித்து ஒரு சிலநிமிடங்கள் செலவழிக்க முடிந்தது மகிழ்ச்சி.

நாளை விஜய தசமி தினம். இந்து மக்கள் யாவரும் அறிந்த வித்தியாரம்பிக்கும் தினம். இதுபற்றி சில மனசுக்குள் தொக்கும் வரிகளை விதைக்கிறேன்
"எழுத்தறிவித்தல் இறைவனின் செயல்" என்று சொல்லுவர். எமது பிள்ளைகளுக்கு இத்தினத்திலே அனேகமாக நாம் எழுதப்பழக்கிக் கொடுக்கிறோம். ஆனால் இத்தினத்துக்கு முன்னமே நமது பிள்ளைகள் எழுத ஆரம்பித்துவிடுவர். ஆனால் சமய சம்பிரதாயம் என்ற ஒரு சடங்கு முறைகளுக்காகவே நாம் இச்செயலை செய்கிறோம்.

இதை தவிர்க்க என்ன செய்யலாம். நமது பிள்ளை இரண்டு அல்லது இரண்டரை வயதுகளிலே எழுத ஆரம்பிக்கும் நாம் ஏதாவது படிக்கும் பொழுது எழுதும் பொழுது அந்தப்பிள்ளையும் வந்து படிக்க எழுத ஆரம்பிக்கும் ஆனால் அவர்களை அந்த செயலுக்கு விடாமல் சில பெற்றோர் "உனக்கு ஏடு தொடங்கல நீ இப்ப எழுதாத" என்று அவர்கள் கல்வி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டாம். அவர்கள் இரண்டு வயது ஆகினால் என்ன இரண்டு வயதுக்கு முன்னமே எழுத்தறிவிக்கலாம் இல்லையா. அப்பிள்ளைக்கு நான்கு ஐந்து வயது வரை காத்திருக்க வைக்காமல் எழுத ஆரம்பிக்க ஏடு தொடங்கணும் என்று முழங்குகிறேன்.
விஜயதசமி என்றால் ஏடு தொடங்கும் நாள் மட்டுமா. இது வித்தியாரம்பிக்கும் நாளும்மல்லவா.
இயல் இசை வாத்தியம் என்று எந்த நற்செயலானாலும் அவற்றை ஆரம்பித்தவிடுங்கள். விதைகளைப் பார்க்கும் போது தெரியாது அதன் விருட்சம். வளர்த்துவிட பிள்ளைக்கு வித்தியாரம்பித்துவிடுங்கள்.

நவராத்திரி விரதம் எனது பழைய பதிவு இங்கு காண்க

ஒரு கவிதை

'அன்னையே உன்னை
ஆராதிக்கிறேன்
அரிசியில் அகரம்
எழுதிய நாள்
முதலாய் தமிழாகி
தலையாயினன்
கற்றுக்கொண்டனன்
வழிகாட்டி நீ என்பதால்
மொழியானேன்
இன்பத் தமிழானேன்

சொல்லிவிடு எழுதிவிடு
எழுதாமல் இருக்கும் எல்லோருக்கும்
இயல் இசை எழுத்து என்று
ஏடு தொடங்கிவிடு
யாவருக்குமாய்
உணர்கிறேன்

என் குரல்வழியை விடசொல்லில்
விரல் வழியாய் விளைந்தவன்
ஆதலால்
அன்னையே வணங்குகிறேன்"

எமது மண்ணின் படைப்பு
இதுவும் எனது ஊரின் அண்ணா தணிகசீலன் அவர்களால் ஆகுகின்ற படைப்புக்கள். இங்கே சமயம் கிராமம் பாட்டு என்று பலவற்றை தரவேற்றம் செய்கிறார். நவராத்திரிப்படைப்பு இங்கே வெள்ளிச்சரம்


ஒரு பாடல்

எங்கே செல்லும் இந்தப்பாதை
பாருங்க சேது படத்திலிருந்து ஒரு பாடல். என் மனதை உருக்கி பல தடவைகள் கேட்டுக்கேட்டு கிறங்கி அழுத பாடல் இப்போதும்கேட்கும் போது மனதை என் பழைய சில நிகழ்வுகளை நெருக்கிவிடும் உணர்வு உயிரின் ஆழத்திலிருந்து சென்று மேலெழந்து கண்ணீரைச் சொரிந்துவிடும்.
என்பாதையின் வழியில் பிதற்றிய சில பொழுதுகள். நண்பன் ஒருவனுடன் கொண்ட மாறுதல்களின் விளைவினால் நான் பட்ட கஸ்டம். ஆனால் இங்க இந்தப்பாடல் காதல் என்று விதைக்கிறது. நான் இதை நட்பு என்று சொல்மாற்றிப்படித்தேன்.
எங்கிருந்தாலும் அவன் நல்லா வாழவேண்டும். அவனால் தான் எனது முன்னேற்றங்கள் வர்க்கங்களாயின. அவனை யாருக்கும் பிடிக்காமல் போகும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

"நட்பின் நீளங்கள் புரியாவிட்டாலும் அதன் தாகம் உணர்வாய் ஒருநாள் "

Friday, October 15, 2010

இது ஸ்டேடஸ் - 08

"இன்று ஐந்து பேரின் கண்ணீரின் காயத்துக்கு மருந்துகொடுக்க முடிந்தது.
ஆத்ம திருப்தி.
அம்மாவோடு என் கண்ணீர் ஆற்றுப்படுத்தப்பட்டது"

"தேசிய வாசிப்பு மாதம் "அக்டோபர் மாதம்".#
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்# "

"நான் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறேனோ அப்படிப்பட்டவர்கள் தான் அதிகமாய் என்னுள் என்னோடு ஆகிறார்கள்.
இன்றும் ஒரு உறவு ஒட்டிக்கொண்டது."


"முடிவெடுக்கும் போது யோசிச்சு சரியாக முடிவெடுக்க. முடிவு எடுத்த பிறகு மாறக்கூடா. வெற்றி இலக்கோடு செயல்படவேணும். தடுமாற்றம் வேண்டாம் "

"மற்றவர்களுக்கு கடமை செய்யவேண்டிய தருணங்களில் செய்துவிடுங்கள்.
இல்லையேல் கடமை செய்வதற்கு நீங்கள் நினைக்கும் நேரம் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும்"

"கஸ்டம் வருங்கால் கடவுளை நாடுகிறோம்(கோயிலுக்கு போகிறோம்) என்றால் ஒவ்வொரு கஸ்டங்களே எம்மை வழிப்படுத்திறது என்று தானே அர்த்தம்"

'தன் பெற்றோருக்கு கடமை செய்யத் தவறி, நல்லா வாழ்ந்ததா எந்தப்பிள்ளைகளையும் இவ்வுலகில் நானறியேன்.
தந்தைதாயின் சிரிப்புலே நாம் வாழமுடியும்"

"தேவையினால் வாழ்க்கையின் ஒரு சில வரிகளில் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாது. மானுடத்தில் இதுவும் இயல்பு. தவறு திருத்திக்கொள்ளவேண்டுமே ஒழிய அதை நிருபிக்காதே"

"அம்மா நீ யார் யாருக்கெல்லாம் பசிபோக்கும் போதெல்லாம் உணரவில்லை
நீ சொன்ன மற்றவர்களின் பசி தீர்க்கும் போதுதான் உன் பசியை யாரோ போக்குவாங்க எண்டு"

தாயும் பழமொழியும்

"என் தாயே
தாய்மை
நுகர்கிறேன்
தன்மை அறிகிறேன்.
நீ ஊட்டிய
பாசம் பண்பு
மற்றவர்களை நேசிக்கும்
உணர்வு
மீண்டும் எங்கெல்லாம்
எனக்கு உதவுது என்பதை
அறிவாயா தாயே.
இதுதானா முன்கை
நீண்டால் முழங்கை நீளும் என்பது"

சில படங்கள் எங்கள் ஊரின் மாலைப் பொழுதுகளில்







Wednesday, October 13, 2010

செல்போன் சிணுங்கல்கள்


நாம் அதிகமாய்
பேசிய வார்த்தை
'அன்பே'(ஹாய்)
தொண்டை வரை வந்து
விழுங்கிக்கொண்டது
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'
(ஐ லவ் யூ)

யார் யாரோ உனக்கு
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்)
அனுப்பலாம்
அழைப்பெடுக்கலாம்

ஈரத்தை உறுஞ்சி
சிறகுகளை உலர்த்தும்
அத்தனை சிலிர்ப்புக்களையும்
சங்கீரணமாக்கும்
சல்லடை
என் புன்சிரிப்பும்
தமிழும்

அன்று
என் அழைப்பை
நீ தவறியதால்
உனக்கு
'தவறிய அழைப்பு' (மிஸ்ட் கோல்)
எனக்கு
தவறிய வாழ்க்கை

இப்போதும் என்
'அழைப்பின் ஒலி' (ரிங் இன் டோன்)
என்றொ பதிவுசெய்த
உன் குரல்

Tuesday, October 12, 2010

வெட்டாதீர் விதையுங்கள்

வீழ்ந்தாலும்
தாவரமாகவே முளைக்க
விரும்புகிறேன்
ஈர விழுதுகள் கொண்டு
உங்களை வாழவைக்கிறேன்

மரம் வெட்டும்
மனிதர்களே!
மரத்துப்போனவர்களே!!
மரமின்றி
மரணித்துபோகிறவர்கள்
நீங்களே!!!

மரம் வெட்டி
விருத்தி காணவேண்டுமெனில்
மனிதம் கொன்று
கல்லறை கட்டுங்கள்

மரம் வெட்டி
கட்டடம் கட்டுவதை விட
மனிதம் கொன்று
கல்லறை கட்டுங்கள்

இறந்தபின் என்னை
தென்னை
மரத்தடியில் புதையுங்கள்
அத்தனை உறுப்புக்களாலும்
உங்களுக்கு உதவுகிறேன் மனிதர்களே!

ஒளிச்சேர்க்கையின்
இலைவாய் வாயுப்பரிமாற்றம் கொண்டு
உயிர்வாழவைக்கிறேன் உங்களை

வெயிலின் வெப்பத்தை
மழையில்லா வரட்சியை
'ஏசி' அறையில், வாகனத்தில்
கனவு காணலாம்
நீங்கள் அனுபவித்த
'வாழ்க்கையை' மறந்துவிட்டீர்கள்
மற்றவர்கள் வாழ்க்கைக்கு
உலைபோடாதீர்கள்
இருக்கைகளுக்காக
மரங்களின் மனிதர்களின்
இருப்பை விலைகொடுக்காதீர்கள்

இப்போதும் சொல்கிறேன்
அபிவிருத்தி எனும் பேரில்
தாவரங்களை வெட்டாதீர்
உங்களைப்போல் அது
'தாமரைகள்' அல்ல

தாவரங்கள்
நிலையாய் நின்று
உலகை (நிலை)நிறுத்தும்
உயிர்ச்சின்னங்கள்

மனதை அகலமாக்குங்கள்
உள்ளம் விருத்தியாகட்டும்

நான் வீழ்ந்தாலும்
ஒரு
தாவரமாகவே
முளைக்க வேண்டும்
இலைகள் கொண்டு
விழுதுகள் கொண்டு
வேர்கள் கொண்டு
உங்களை வாழவைக்கிறேன்



மேலுள்ள படங்கள் மட்டக்களப்பு வாவிக்கரை வீதி இல 1 இன் ஓரங்களில் இருக்கும் மட்டக்களப்பு வாவியின் ஓரங்களில் இருக்கும் மரங்கள். இவற்றை வெட்டி வீதி அபிவிருத்தி செய்யப்படப்போகிறதாம். (இதில் முதலமைச்சர் வாசஸ்தலமும் இருக்கிறது) இவ்வீதிகளை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்குப்பதிலாக, இவ்வீதியை இருபக்க வீதியாக்கப்படுவதை விட ஒரு பக்கவீதியாக (one way)பயன்படுத்தலாம் இம்மரங்களை வெட்டும் எண்ணம் இருந்தால் தயவுசெய்து வெட்டாதீர்கள். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

Sunday, October 10, 2010

வழிகின்ற அது சுமக்கின்ற நான்

இன்னமும்
இழுத்துக்கொண்டு
இறக்கிவிட முடியாமல்

தள்ளிக்கொண்டும்
இழுத்துக்கொண்டும்
இன்னமும் நடந்துகொண்டு

சிரிக்கவேண்டிய தருணங்களில்
மெளனமாகவும்
கதைத்துவிடவேண்டிய பொழுதுகளில்
மெல்லிய உதட்டுச்சாயத்தை
உதிர்த்துக்கொண்டு

அடிமனதில்
சிவப்புப் படர்ந்திருந்த
கீறல்கள்
அந்திமாலையா
அதிகாலையா
கேட்டுக்கொண்டு

வெறும் கால்களோடு
பலதூரம் நடந்தபின்
பின்னால் ஒருவன்
வலதுகைப் பக்கமாக
முந்திக்கொண்டு
'உங்கள் கால்களில்
பலமாய் முட்கள்
தைத்திருக்கு
இரத்தத் தடங்கள்"
என்றவனை ஏறெடுக்க
ஒற்றைக்காலோடு
'தடி' ஏந்திக்கொண்டு
அவன்

அவனுக்கு
'என் இரத்தத்தை
தொட்டு நுகராதே
உன் விரல்களுக்கிடையில்
பிசுபிசுக்கும்
குடும்ப சுமையின்
வெப்பக்கண்ணீர்
வாழாமல் வழியும்
வாழ்க்கை'

Friday, October 8, 2010

வேயப்படும் கனவு

சீனியில்
மொய்க்கும் ஈக்களாய்
உணர்வுகள்

தின்னப்படுகிறது

கட்டிக்கொண்டது
கற்றுத்தரவில்லை

மொய்க்கும்
ஈக்களாய்
பச்சக்காயம்
காயம்
காயப்பட்ட வடு

வலிக்கப்படுகிறது

ஒட்டிக்கொண்டது
ஒடிந்துகொள்ளவில்லை

பூமிக்குள் பூகம்பம்
கனவுகள்
வேயப்படுகிறது

எரிமலைக்குழம்பு
கண்ணீர்
குமுறிக்கொள்கிறது

கூரையில்
ஓட்டைகள்
ஒட்டடைகள்
நிலவின் வெளிச்சம்
வட்டமாய்
கண்ணுக்குள்

Thursday, October 7, 2010

நன்றி வணக்கம்

எழுத்தறிவிக்கும் இறையோன்களே!
உங்கள் பழுத்தறிவிலே
பகுத்தறிவு வாழ்க்கை வாழ்கிறோம்

பாடக்கல்வி எழுத்துக்களின்
கட்டாயக் கல்வி

அனுபவப் பகிர்வும் - உங்கள்
அரவணைப்புக்களும்
காலத்தின் நின்று கட்டியெழுப்பும்
உணர்வுத்தூண்கள்

வெற்றிகள் உயர்வுகள் எம்மைச்
சுற்றிவரும் பொழுது
கடவுள் எம்மை
ஆசிர்வதிக்க மறந்தாலும்
எங்கோ ஒரு மூலையில் -உங்கள்
அருளும் ஆசிகளும்
விளக்கேற்றிக்கொண்டிருக்கும்

தவறு செய்யும் கணங்களில்
தண்டனை கொடுங்கள்
மன்னிப்பு என்னை வழிப்படுத்தாது
கற்றுத் தந்தது நீங்களே!!

கரும்பலகை மனதில்
வெள்ளையடித்து
வெளிச்சப்படுத்தும் உங்கள்
'வெண்கட்டி' எழுத்துக்கள்
அழித்துவிட்டுப்போனாலும்
அழியா இடம் பிடித்துக்கொள்ளும்

தடுமாறும் கணங்களிலும் நான்
தடம்மாறக் கூடாதென்று
எப்போதும் அரணவணைத்து
ஆசிர்வதிக்கும் ஆசான்களே!!

வெளிச்சம் ஏற்றிய
வெற்றித்தீபங்களே!!

எனது வெற்றிகளையும்
இன்ப நுகர்வுகளையும்
அர்ப்பணிக்கிறேன் உங்களுக்கு.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு