Pages

Sunday, December 23, 2012

பெற்றோரே! இது உங்களின் கவனத்துக்கு...

(தமிழ்த்தந்திக்காக )

பல்கலைக்கழகம் என்ற இலக்கு சின்னப்பருவத்தில் படிக்கும்போது தெரிவதில்லை அல்லது எண்ணுவதில்லை.
ஏதோ படிக்கிறோம், அல்லது படிக்கத் திணிக்கப்படுகின்றோம், என்ற நிலையில் எமது கல்விநிலை அனேகமானோரிடம் காணப்படுகின்றது.


ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை என்ற கட்டாயத்துக்கும் பெற்றோரின் பெருமைகளுக்கும் என்றுமாய் முதலாவது திணிப்பு நாடகம் அரங்கேறுகிறது.

அப்பரீட்சையில்; பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப அப்பரீட்சை போதுமானதாக இருந்தாலும், நமது நாட்டில் அனேக பிள்ளைகள் உடல், உள வளர்ச்சிகளில் முன்னேற்றம் காணப்படாதிருக்கின்ற நிலை பல பிரதேசங்களில் இருக்கின்றது.

இதற்கு எமது பிள்ளைகளின் வளர்ச்சிப்பருவங்களில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குரிய சரியான போசணையளவு பேணப்பட்டு வளர்க்கப்படுவது குறைவு. இதற்காக இதுவரை சரியான சுகாதாரக் கட்டமைப்புக்கள் முறையாக ஆறு அல்லது ஏழு வயதுகளுக்கு மேல் இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.

சற்று பொருளாதார வசதி குறைந்த குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்கள் இப்பிரச்சனைக்கு இயல்பாக உள்ளாக்கப்படுகின்றனர்.
நமது நாட்டில் நடுத்தர அல்லது அதற்கும் குறைந்த பொருளாதார வசதியுள்ள குடும்பத்தினரே கூடிய சதவீதத்தில் இருப்பதால், புலமைப்பரிசில் பரீட்சையானது பிள்ளைகளை மிகவும் கஸ்டத்துக்கும் அதிக மன உழைச்சலுக்கும் உள்ளாகக்கூடிய நிலையிருப்பது வருந்ததக்கதது. சாதாரணமாய் நாம் பார்க்கின்ற விடயம் இது.

இதற்கு ஒரு உதாரணமாக கடந்த பரீட்சையொன்றில் நடந்த உண்மையான விடயத்தை பகிர்கிறேன்.
'ஒரு மாணவன் வகுப்பில் கெட்டிக்காரன். அவனது பொருளாதார வசதிபடைத்த பெற்றோர் அவனை மிகவும் கஸ்டப்படுத்தியற்காக அவன் பரீட்சை மண்டபத்தில் சுட்டெண்ணை மட்டும் எழுதி விடைகளை எழுதாமல் வெறுமையாக கொடுத்திருந்தான்'. ஆய்வாக நிகழ்த்தப்பட்டதில் ஐந்தாம் தரத்தில் சித்தியெய்திய மாணவர்களில் அனேகம்பேர் உயர்தரத்தில் பல்கலைக்கழகத்தை தவறுகின்றனர்.

"பிள்ளைக்குரிய போதிய உடல் உளவளர்ச்சியையும் முறையான வழிகாட்டல்களையும் மேற்கொண்டால் எதுவும் வெற்றியே!."

ஐந்தாரம் தரத்திற்குப் பிற்பாடு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில்; ஆறாந்தரத்தில், தமது பிள்ளைகள் மீது பெற்றோர்கள் பெருமளவில் அக்கறை செலுத்தத் தவறுகின்றனர். காரணம் கடந்தவருடம் பிள்ளையை கூடுதலாகக் கஸ்டப்படுத்தியாச்சு, ஆகவே என்னவாவது தன்னாலான செயற்பாடுகளை செய்யட்டும் என்ற மனப்பாங்கு அனேக பெற்றோரிடம் இருப்பது வழமையான விடயம். இது பெற்றோர் விடும் தவறு.
பிள்ளையின் தொடர்ச்சியான கல்வியின் தொடரறா ஒத்துழைப்பில் கவனக்குறைவு நடக்கிறது. இதனால் பிள்ளைகள் தமது மேல்வகுப்புக்களில் கஸ்டமான கற்றல்களுக்கு உள்ளாகின்றமை உள்ளங்கை நெல்லிக்கனி.


பின்னர் கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) சாதாரணதரப் பரீட்சைக்கு ஆயத்தமாகும் தருணம். இது பிள்ளையின் முயற்சியும் பயிற்சியும் நிறைந்த நிலையிருக்கவேண்டிய தருணம்.
ஆனால் பிள்ளைக்கு சரியான ஒத்துழைப்பும் தொடர்ச்சியான கவனமும் தரம் பதினொன்றிலேதான் அதுவும் கடைசித் தவணையிலேதான் அனேக பெற்றோரிடமிருந்து கிடைக்கின்றது. இதனால் பிள்ளைகள் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெறத்தவறுகின்றனர்.

உண்மையில் பெற்றோரின் தொடர்ச்சியான கண்காணிப்பு தரம் ஆறிலிருந்து ஆரம்பமாகவேண்டும். பிள்ளைக்கு எழுதத்தெரிகிறதா, வாசிக்கமுடிகிறதா, ஏதாவது பிரச்சனை பிள்ளையின் கல்வியில் இருக்கிறதா? பிள்ளைகளுக்கு ஏதாவது உடலியல் அல்லது உளவியல் பிரச்சனைகள் இருக்கின்றதா,? என்றெல்லாம் பிள்ளைகளோடும் பாடசாலையில் ஆசிரியர்களோடும் கதைத்து; பிரத்தியேக வகுப்புப் பாட ஆசிரியர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு பிள்ளைநேயக் கல்வியை ஊட்டவேண்டும்.

அக்காலகட்டத்தில் மொழியறிவு மீது அதுவும் தான் கல்விபயிலும் தாய்மொழிமீது சரியான வாசிப்பும் எழுத்தாற்றலும் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். காரணம் மொழியறிவில் குறைவு ஏற்படும் பட்சத்தில் பிள்ளைகள் ஏனைய பாடங்களை சரியாகக் கற்க முடியாது. மேல்வகுப்புக்களில் பிள்ளைகள் எதிர்நோக்கும் பாரிய சவாலாக இது காணப்படுகின்றது.

பிள்ளை தரம் ஒன்பதிற்கு உயரும்போதே, அடுத்தது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை. அதன்பின்னர் பிள்ளையின் எதிர்காலம், எதிர்காலத்தில் எந்தத்துறையில் பிள்ளைகள் முன்னேற முடியும், தெரிவுசெய்கின்ற துறையில் பாடங்களின் தெரிவு எவ்வாறு அமையவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகளுக்கு, பெற்றோர் ஆசிரியர்களுடன் சேர்ந்து இதுபற்றிய கூடுதலான அறிவுறுத்தல்களையும் அனுபவப் பகிர்வுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை காரணம் தற்போதைய நிலையில் தரம் பத்தில் மூன்று வகை தொகுதிப்பாடங்கள் காணப்படுகின்றன. இவற்றை பிள்ளை என்ன என்ன பாடம் இப்பாடத்தை என்னால் கொண்டுசெல்ல முடியுமா என்கிற எண்ணம் எல்லாம் இல்லாமல் படித்து, பின்னர் குழப்ப நிலையடைவது கண்கூடு. இதற்காக தமது பிள்ளையின் கல்விநிலையை கண்காணிப்புடன் இருக்கவேண்டியது அத்தனை பெற்றோரினதும் தலையாய கடமை.

இதற்கு மேலதிகமாக பிள்ளைகள் தரம் ஒன்பதிலே கற்கும் போதே, தமது எதிர்கால உயர்தரக் கல்வி பற்றிய மேலெழுந்தவாரியான விளக்கமாவது பிள்ளைக்கு இருக்கவேண்டும். இதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம்.
உயர்தரம் பற்றிய பரந்த எண்ணப்பாங்கு பிள்ளைகளுக்கு வழங்கப்படவேண்டும்.
ஏனெனில் க.பொ.த சாதாரண தரத்தில் பிள்ளைகள் பரீட்சை எழுதியவுடனேயே உயர்தரப் பரீட்சைகளுக்குரிய பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பமாவதால் திடீரென முடிவெடுத்து (அனேகமாக நண்பர்களுடன் கூட்டாக) ஏதாவது ஒரு துறையில் (கலை, விஞ்ஞான,வர்த்தக) உயர்தரக் கல்வியைத் தொடருகின்றனர்.

இதனால் பிள்ளைகள் சரியான துறையைத் தெரிவுசெய்யாததால் பிள்ளைகள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறப்பான முடிவுகளை அதாவது பெறுபேறுகளை ஈட்டிக்கொள்ளத் தவறுகின்றார்கள். சிலபிள்ளைகள் உயர்தரவகுப்பில் முதலாம் வருட இடைநடுவே தமது கற்கை நெறியை மாற்றிக்கொள்வதும் இவ்வாறன சரியான தெளிவின்மையே.

இதன்காரணமாக மீண்டும் பெற்றோர் பிள்ளைகள் மீது தங்களது வெறுப்புணர்வுகளைச் சித்தரிக்கின்றனர். பிள்ளைகள் மீது குற்றம் சொல்லி கவலைப்படும்போதும், பிள்ளைகள் தங்களுக்கு தெரியாமல்போயிற்று இப்படியெல்லாம் பல்வேறுவிடயங்கள் இருக்குதென்று இப்பதான் எல்லாம் தெரியுது என்று சொல்லியழுவதற்கு முன்னரே திட்டமிடுங்கள் பெற்றோரே.

இதற்காக பிள்ளைகளை தரம் ஒன்பதுக்கு பிறகு சுயமான கற்றலுக்கும் கூடுதலான வாசிப்புப் பயிற்சிக்கும் ஒவ்வொரு பாடங்களின் வினாக்களுக்கான கூடுதல் பயிற்சிகளுக்கும் தெளிவான கற்றல்லுக்கும் ஆன வாய்ப்புக்களை வழங்குங்கள். அதிக நேரம் பிரத்தியேக வகுப்புக்களுக்கு பிள்ளைகளை விட்டு படித்த விடயங்களை படிப்பதற்கு நேரம் இல்லாமை என்கிற நிலைமை ஏற்படா வண்ணம் பிள்ளைகளை படிப்பியுங்கள்.

பிள்ளைகளுடன் அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மிகவும் கஸ்டமானதும் எளிதுமானவிடயம் கற்றலே என்று கற்றுக்கொடுங்கள். விசாலமான எண்ணப்பாங்குகளை பிள்ளைகளுக்கு ஊட்டுங்கள். பிள்ளைகளோடு சேர்ந்து பிள்ளைகளுக்காக நீங்களும் படியுங்கள். உங்களுக்கு தெரியாத பாட விடயங்களை பிள்ளைகளுக்கு வேறு சரியானவர்கள் மூலம் சொல்லிக்கொடுக்க உதவுங்கள்.

"பிள்ளைகளின் கல்வி என்பது உங்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் அவசியமாக இருக்கின்றது."

ஒரு சமூகம் அபிவிருத்தி காணவேண்டுமெனில் முதலில் சிறுவர்களின் கல்வி விருத்தியடைய வேண்டும். ஒரு பிள்ளை தனது ஆரம்பக்கல்வியை தனது ஐந்து,ஆறு,ஏழு,எட்டு வயதுகளிலாவது மேற்கொள்ளவில்லையாயின் தனது வாழ்க்கையின் கல்விகற்றலின் பெருமான்மையை இழக்கநேரிடுகிறது.

ஆக, பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியில், வெறுப்புணர்வு ஏற்படா வண்ணம் ஆர்வமான முறையில், கல்விகற்றலின் சில பொருத்தமான நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்கவேண்டும். இது ஒவ்வொருவரின் கடமை. எங்களிடம் எஞ்சியிருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் கல்வி. வளருங்கள்.

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு