Pages

Showing posts with label இரங்கற்பா. Show all posts
Showing posts with label இரங்கற்பா. Show all posts

Saturday, April 9, 2011

சிவன் வீடு தேடியா போனாய்?

ஓடி ஓடி வாசல் வருவாயே மாமி
சிவன் வீடு தேடியா போனாய்?

'தம்பி எப்படி இருக்கான்' என்று
தவறாமல் வருவாயே !

'யோசிக்காதே எல்லாம்
நல்லாகும்' என்று சொல்வாயே
நீ எமை விட்டு சென்றாயே
நாம் மட்டும் என்னாவது ???

காலச்சக்கரத்தில் உனக்கு
இறப்பு
வாழ்க்கைச்சக்கரத்தில்
எங்களுக்கு இழப்பு

'நான் மட்டும் வராமல்
என் பேத்தியை
பார்க்காமல் போவேனோ'
என்று நீ வந்து
முந்தானையில்
மருமகளை தூக்கி
உச்சிமோந்த காட்சி
நிக்குது நெஞ்சில்
இன்னும்
உன் அன்பு மாறாமல்..

வீட்டில் யாருக்கும் வருத்தம்
என்றால் போதுமே
முதன் முதலாக தெம்பிலி,
தோடங்காய், வீவா
என்று ஆயிரம் அன்புகளை
கொண்டுவருவாயே
இன்று நீ இல்லை
கலங்குகிறோம் நினைவாலே
அஞ்சலிக்கிறோம்
உறவாலே...

எதுவேண்டும் என்று
கேட்டபோதெல்லாம்
ஒன்றும் தேவையில்லை
உங்கள் அன்பு போதும்
என்பாயே
இனி யாருக்காக
அன்பு செய்வோம்
நீ மட்டும் சென்றால்.....

ஓடி ஓடி வாசல் வருவாயே மாமி
சிவன் வீடு தேடியா போனாய்?

ஆத்ம அஞ்சலி

மாமியின் 31 ஆம் நினைவு நாளையொட்டி அஞ்சலிக்கிறோம்.


Sunday, October 24, 2010

இரங்கற்பா

தேற்றாத்தீவைப் பிறப்படமாக்கி வாழ்வாக்கிய
அமரர்.கிருஷ்ணப்பிள்ளை அற்புதநாதன்
அவர்களின் மறைவுக்கு
இரங்கற்பா


இந்து இளைஞர் மன்றமதில்
முன்னாள் உறுப்பினன் நீ
சைவத்துக்காய் எந்நாளும் ஆன நீ
விட்டுபோனாயே... அற்புதா
பரிதவிக்கிறோம் பாருமையா..

இனிவருங்காலம் பாதயாத்திரையில்
ஒரு இடைவெளி – அங்கு
உன் இழப்பு எப்போதும் பேசப்படும்

எத்தனை படைப்புக்கள்
கட்டடச்சிற்பங்கள்
கொம்புச்சந்தியான் சந்நிதியில்
அத்தனை சப்தங்களையும்
உயிர்ப்புள்ள தூணாய்
மொழிபெயர்க்க ஆனாய்
இன்று
உன் கடைசி நிசப்தத்தால்
மரணிக்கச்செய்துவிட்டாய் எம்மை

காலை மதியம் மாலை
பிள்ளையார் கோயிலடி 'அற்புதம்'
உன் திடுக்கிட்ட பேச்சு
தித்திக்கும் நேர்மை
முன்னிற்கும் ஆளுமை
நெஞ்சில் நிலைக்கும்
விட்டுப்போனாயே அற்புதா!!!

அற்புதா இன்று நீ இல்லை
ஊமையாகிறது தவிலும் மணியும்
சங்கு மட்டும் சப்திக்கிறது
நெஞ்சம் நெகிழ்கிறது
கண்கள் பொழிகிறது

அனேகமாக மரணம் வந்துதான்
வாங்கிக்கொள்ளும் - நீதான்
மரணத்தை வாங்கியவன்

ஊரின் எந்த மூலையில்
மரணம் பேசப்பட்டாலும்
உன்பாதங்கள் பயணிக்கும்
நீ போகாத மரணவீடுகள் ஏது?
அதுதான் அதிக கால்தடங்கள்
உன் மரணத்தில்......

கோயில் கோயிலடி ஆகினயே
கோயிலான் வான்வாசல் சேர்ந்தாயோ!!
கண்ணுக்குள் கருத்தாய் ஆயினயே
கண்ணீரில் மிதக்க விட்டாயே!!

கண்களை உதிர்த்துவிட்டுப்
போகிறாயே
நெஞ்சில் நினைவுகளை
சுமக்கிறோம் நாம்

வியர்வைகள் விதைத்து
பிள்ளைகள் வளர்த்தாய்
விளைநிலம் தரிசு நிலமாகிறது
நீ எம்மை விட்டுப் பிரிகையிலே..

உன் ஆத்மா சாந்தியடையட்டும்
திருச்சிற்றம்பலம் ஓதிய நீ
கொம்புச்சந்தியான் பாதம்
சேர பிராத்திக்கிறோம்...
அஞ்சலிக்கிறோம்...

Thursday, September 30, 2010

இரங்கற்பா

தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர்
அமரர் கந்தப்பெருமாள் பரமலிங்கம் அவர்களின் மறைவுக்கு
இரங்கற்பா



குடிமரபின்கண் மக்கள் வாழ்
கோயில் வளர் தேனூர்
பதிவளரும் தமிழ் இயல்பினை
ஒட்டி பழம்பெரு பேனாச்சி
குடியின் பேர்கொண்ட
நீள் தலைவனே!

இன்று பரமனடி நீ சேர்ந்து
பரிதவிக்க எமை விட்டனயே!!
கார்மேகம் கலங்கி
கண்ணீர்ப் பூக்கள் தூவிச்செல்லும்.

கண்ணியமிகு காலனவனின்
கையினில் நழுவலாமோ...?
நீ செய்த சேவை போதுமென்று
எம்கண்ணில் விழுநீர் கங்கையாக
விட்புலம் சேர்த்தானோ எம்பெருமான்

கொம்புச்சந்தி பிள்ளையார்
ஆலய பரிபாலனசபை செயலாளராய்
பாலமுருகன் கோயில்
கண்ணகையம்மன் கோயில்
வண்ணக்கராய் நீவீர் ஆயினயே

கோயில் கோயில்
நடை நடந்து இன்று
இறைவனடி சேர்ந்தனயே
சிந்தை கலங்குதையா
நீ பிரிந்ததிலே
உன் ஆத்மா ஆறுதலடையட்டும்
உன் நித்திரை பூரணமடையட்டும்
இதய அஞ்சலி
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு