Pages

Saturday, June 26, 2010

மதம்+ கடவுள்+ நாம் ???

அண்மைக்காலமாய் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நானும்.
கடவுள், இப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பார். கடவுள், என்னைப் பரீட்சையில் சித்திபெறச் செய்வார். கடவுள் எல்லாம் தருவார்..... இப்படி எந்த விடயமாகிலும் நாம் கடவுள் பெயரைச் சொல்லி சொல்லி.. இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்கும் போது இன்னும் எனக்குள் கடவுள் மீது இருந்த ஏதோ ஒரு பக்தி அல்லது நம்பிக்கை என்னை விட்டுப்போவதாக உணரப்படுகிறது.
"கடவுள் எல்லாம் செய்வார் என்றால் நாம் எதுக்கு வாழ வேண்டும் கடவுளே வாழ்ந்துவிட்டுப் போகலாமே??"

நண்பர் ஒருவர் சொன்ன கதை இது,(இதில் மதம் சம்பந்தவிடங்களை விடுத்து அதன் உட்கருத்தைப்பார்க்க)
இவர் றோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர். தனது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கிறிஸ்தவ மதத்தின் வேறொரு சபையின் வழிவந்தவர்கள். இந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் எதற்கெடுத்தாலும் ' இயேசப்பா தான் இதைச் செய்திருக்கிறார்." என்று அனைத்து விடயங்களுக்கும் கடவுளின் நாமத்தை சொல்லிக்கொள்வார்களாம். பல மாதங்களாக இவர்கள் வீட்டில் மின்சாரத் தடை விட்டுவிட்டு வந்து கொண்டிருக்குமாம். அப்போது கூட்டுத்தடியினால் உருகி(பியுஸ்) இன்மீது யேசப்பா யேசப்பா என்று தட்டும் போது மீண்டும் மின்சாரத் தடை நீக்கப்பட்டுவிடுமாம்.. அப்போதும் யேசப்பா தான் தந்தவர் என்று சொல்லிக்கொள்வார்களாம். இப்படியே பல மாதங்களாக ஓடிக்கொண்டிருக்க, ஒரு நாள் நம்ம நண்பரிடம் சொன்னார்களாம் வீட்டில் "கரண்ட் கட்டாகிட்டு கொஞ்சம் பாருங்களேன்" என்று. இவரும் போய் டெஸ்ரர் கொண்டு தனக்குத் தெரிந்த அறிவைப்பயன்படுத்தி பார்க்க பியுஸ் சரியாக இணைக்கப்படாமல் பட்டும் படாமலும் இருந்ததாம். இவர்கள் கூட்டுத்தடியால் தட்டும்போது இதன் துண்டித்த இணைப்பு தொடர்புபடும். அப்போது நம்ம நண்பர் சொன்னாராம். இணைப்பில் உள்ள பிரச்சனையைக்காட்டி இதுதான் உங்கள் கரண்ட் பிரச்சனை. இதுக்குப்போய் யேசப்பா தான் தந்தவர் என்று கடவுளின் பெயரை அவமானப்படுத்தக்கூடாது என்று அப்பிரச்சனையைக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.

இதேபோல் நம்ம இன்னொரு நண்பர்,(இதிலும் மதம் சம்பந்தவிடங்களை விடுத்து அதன் உட்கருத்தைப்பார்க்க)
இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் பாடசாலைக்காலங்களில் மார்க்க விடயங்களில் தான் தவறாக நடந்ததாகவும் இப்போது நல்லவனாக இருப்பதாகவும் சொன்னார். அதாவது இப்பொழுதுதான் மார்க்க சிந்தனைகள் பற்றிப்பேசுவதாகவும் பக்குவப்பட்டதாகவும் தான் மட்டுமே Perfect (இதன் தமிழ்காண்க)ஆனவன் என்றும் அடிக்கடி சொல்லிக்கொள்ளுவார். இதேபோல் தனது அனைத்து செயல்களுக்கும் "அல்லா" தான் காரணம் என்று சொல்லுவார். ஆக, என்னிடம் காசு தந்து "அந்தக்கடைக்குப்போய் சிகரெட் வாங்கி வா மச்சான் ஊரில நம்ம பெரிய தத்துவம் சொல்லுற அதால யாரும் கண்டானுகள் எண்டா என்னைக் கீழ்சாதிக்காரான் எண்டு சொல்லுவானுகள் நீ போய் வாங்கிவா" இது எனக்கு பல கஸ்டங்களைக் கொண்டுவரும்
1. நான் சிகரெட் வாங்கும்போது என்னைத் தெரிந்தவர்கள் கண்டால் எனக்கு கஸ்டமாக இருக்கும் நான் சிகரெட் பிடிப்பதில்லை என்பதால்
2. இவருக்கு இந்த உதவி செய்யாவிட்டால் நண்பர் என்னை வெறுப்பார்

இந்த தர்மசங்கடத்தாலும் நான் அவருக்கு அதை வாங்கிக் கொடுத்து யோசிக்கும் விடயம் இதுதான்
நீங்கள் யாருக்காக பயப்படுகிறீர்கள்? யார் யாரை ஏமாற்றுகிறீர்கள் ?
கடவுளுக்காக வாழ்கிறீர்கள் என்றால், எதற்கு நீங்கள் கள்ளத்தனமாக வாழவேண்டும் சமூகத்திற்கு பயப்படவேண்டும்??
அப்போ கடவுள் பெயரை நாறடிக்காதீர்கள்.இதை அவரிடம் சொன்னபோது அவர் தான் செய்வதுதான் சரி என்றும் சமூகத்துக்கு தெரியாமல் நடித்தால் போதும் இதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார்.
ம்ம்ம் என்னபண்ணுறது? மனசு கஸ்டப்படுகிறதா??

(இதிலும் மதம் சம்பந்தவிடங்களை விடுத்து அதன் உட்கருத்தைப்பார்க்க)

இதேபோல் மன நிம்மதிக்காக வழிபாட்டுக்காகவா கோயில்கள் கட்டப்படுகிறன இல்லை நமது பொருளாதார சிறப்பை அதன் பெருமையைக் காட்டவா கட்டப்படுகிறன?? இல்லை சாமி கேட்டாரா இந்தளவு பெரிய கோயில் வேண்டும் இப்படி அமைய வேண்டும் என்று. நாம் பல கோடிப்பணம் செலவழித்து கட்டும் கோயில்களை விட சிலவேளைகளில் ஒரு சிறிய மரநிழலில் இருக்கும் கோயில் மனதுக்கு நிம்மதியையும் அமைதியையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஒருவர் சொன்னார் " எனக்கு பணிவிடையாயிருக்கு இப்படி பெரிதாக கோயில் கட்டவேண்டும், இந்த திருவுருவம் பெரியதாக எல்லோரும் பார்க்கத் தெரியணும்"
இங்கு கனவு என்பது பணிவிடையாகிறது.கனவு காணலாம் சைக்கிளில் போவதைவிட ஏறோப்பிளேனில்(விமானத்தில்) போவதாய் கனவு காணலாம். எமது பொருளாதாரப் பிண்ணணி சைக்கிளிலும் போக முடியாமல் நடந்தே போக வேண்டி இருக்கும் போது, நமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள கடவுள் பெயரை கஸ்டப்படுத்தவேண்டுமா??? கோயிலில் மூலஸ்த்தானத்தில் உள்ள கடவுள்தான் நமக்கு மனநிம்மதியைத் தருகிறார் என்றால் பல இலட்சம் பணங்களைச் செலவிட்டு செய்யும் சிற்ப வேலைகள் எதுக்கு? அதிக பணத்தை நாம் செலவிட்டால், நமது பெருமை கூறக்கேட்டல் நமக்கு நிம்மதியைத்தருமா?
கோயில் ஆன்மா வாழுமிடம் ஆன்மா நிம்மதியடைய வேண்டுமல்லவா?

ஆக கடவுள் வழிபாடு,மார்க்கங்கள்,தர்மங்கள் அல்லது மதங்கள், உண்மையில் சொல்லுவதென்ன. நமக்காகவா மதம் மதத்துக்காகவா நாம்??? கடவுளுக்காகவா நாங்கள் கடவுள் நமக்காகவா???

கடவுள் இல்லை என்று சொன்னால் நான் நாத்திகன் ஆகிறேன். அப்போது கடவுள் உண்டு என்று சொன்னால் கடவுள்வாதியாகிறேன்.
ஆனால் கடவுள் இல்லை கடவுள் நம்பிக்கையே உண்டு என்று சொல்லும் நான் யார்???
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் கேட்டுக்கொள்க.

மதம் அல்லது மார்க்கம் என்பது நாம் நமது பிறப்பினால் பெறப்பட்டதல்ல. நம் பெற்றோர்கள் தாம் பின்பற்றிய சமயத்தை நம் மீது திணித்துவிட்டதே அல்லது அதன் பின் நம்மளை வழிபடசெய்யச் சொல்லப்பட்டவே ஒழிய நாங்களாக விரும்பிப் பெறவில்லை.

ஆதலால் இது நமது மூடத்தனத்தையும் மூர்க்கத்தனத்தையும் தகர்த்து அன்பின் வழிகாட்டுதல் வேண்டும்.அதாவது நாம் அனைவரும் இதை உணர்ந்து அன்பே மதம், சமயம், மார்க்கம் என்று கொள்வோமானால் மனம் நம்மதியடையும். மதத்தின் பேரால் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளுவோரும், மற்றவர்களை ஏமாற்றிக்கொள்வோள்வோரும் உணருங்கள். நல்லவை நடப்பதற்கு ஆவனை செய்வோமே.
அன்பே நிரந்தரம்
அன்பே கடவுள்
நம்பிக்கை கொள்க

பி.கு.:
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.
மதம் கொண்டு மதம் கொள்ள வேண்டாம்
மனம் கொண்டு மதம் வளர்க்க

சிறகுகள் உலர்த்திய சிதறல்கள்

நண்பர் ஜெயமார்த்தாண்டன் அவர்கள் அழைத்தும் பல நாட்களாய் இல்லை பல வாரங்களாய் எழுத நினைத்து எழுதாமல் போன பதின்மவயது தொடர்பதிவு.(மன்னிக்க வேண்டுகிறேன் மார்த்தாண்டன், வேலைப்பளு தான் காரணம்)
முதலில் நன்றி கூடுசாலைக்கு

எத்தனையோ நாட்கள் இல்லை வருடங்கள் உதிர்ந்த போதும்.... வாழ்க்கைச் சக்கரத்தில் என் சிறகுகள் உலர்த்த தொடங்கிய நாட்கள் இன்னும் ஈரப்படுத்திக் கொண்டு உள்மனதில்.

எங்க ஊரில் கிரிக்கெட் மட்டுமே தெரிந்த விளையாட்டு. வாழைக்காலை என்று சொல்லும் சற்று களி நிறைந்ததரை ஆனா அங்கே தென்னைகளே இருந்தன வாழைகள் இல்லை.( வாழைக்காலை என்பது வாழைத்தோட்டத்திற்கு பேச்சு வழக்கில் இங்கு சொல்லப்படுவது) அந்தக்கிரிக்கட் பைத்தியங்களான காலம் தென்னை மட்டைகளும் டெனிஸ் பந்துகளும் விக்கட்டுகளுக்கு பூவரசு கம்புகளும் நாங்களும்....


ஆங்கில வகுப்புக்கு எண்டா எங்கள் ஆங்கில ஆசான் திரு.திருஞானசம்பந்தன் ஆசிரியர் தான் இவர் மட்டுமே இப்போதும் ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருக்கிறார். இவரின் வகுப்புக்கு செல்ல என்னிடம் நீல நில சின்னச் சைக்கிள் இருந்தது.இதில் நான் ஓட முன்னுக்கு என் நண்பன் ஒருவன் கைபிடியில்(ஹேண்டிலில்) மற்றொரு நண்பன் பின்னுக்கு இன்னொரு நண்பனுமாக சைக்கிள் சவாரி..ஏஹே ஓஹோ லால லா.... இன்னும் கண்ணுக்குள் இருக்கு நாய்துரத்திக்கொள்ள நாங்கள் ஒரு வளைவில் விழுந்து முழங்காலில் உரசல் காயம் மனதுக்குள் டிக் டிக் எண்டு பயப்புட்டு வகுப்புக்குள் வேர்த்து இருந்த அந்த நாள்.............
(இவர்தான் எங்கள் ஆங்கில மொழி ஆசான்: திரு.திருஞானசம்பந்தர் சேர்)

தொலைக்காட்சியில் அதிக நாட்டம் இல்லாமையிலும் ஆனாலும் விரும்பிய ரொபின் கூட், டார்ஷான், நைட் ரைடர் தொடர்கள் இன்னும் பார்க்கணும் எண்டு ...

அப்போதுதான் தமிழ் ஊற்றெடுக்கத் தொடங்கவே.. சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் குழைந்த பருவங்கள். ரசித்து துவைத்த மனதுடன் கவிதை வரிகள் கோர்க்கத் தொடங்கிய போது.. என் பெற்றோர் "இவன் காதல் வயப்பட்டு விட்டான்" என்று எண்ணிவிடுவார்கள் என்று பயந்து பல நாட்கள் கவிதைத் தாள்களை ஒழித்து வைத்து அப்பா அக்கா இவர்களுக்கு காதல் தவிர்த்து கவி வரிகளை வாசித்துக்காட்டிய நான். என் கவிதைகளை என்னைவிட என்மற்றைய புத்தகங்களே அதிகம் படித்துக்கொண்டன ஒழித்து வைத்தததால்............

நான் சுதந்திரப்பறவையாக வேண்டிய தருணம் அது. உயர்தரம் படிக்க மட்டக்களப்பு நகர் வந்து படித்த பொழுதுகள்.அப்போதுதான் தனியாக பேருந்துகளில் பயணிக்கத் தொடங்கிய பொழுதுகள். உரசல்களும் திக் என்ற உணர்வுகளும் பஸ் நெருசல்களில் கண்ட காட்சிகளில் மனக்கிழிஞல்களும், மன எழுச்சிகளும்...

அப்படியாக........
தித்திக்கும் உணர்வுகள் இன்னும் ஈரப்பட்டுக்கொண்டு.......

சிதறல்கள் உலர்த்திய சிறகுகளை யாரும் தொடரலாம்.

Saturday, June 12, 2010

காதல் கிறுக்கன்

உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகள்
எப்போதாவது
அதைச் சொல்லும் என்று

என் செல்போன்
அதிகளவு எழுதிய
அந்த வரிகளை

என் நெஞ்சின் மீது
ஆழமாய்ப் பதிந்த
அது

வார்த்தைகளில்
இல்லாவிடினும்
வரிகளில் மிளிருமெண்டு
அடிக்கடி நானும்
எஸ் எம் எஸ்
வந்திருக்கா எண்டு

பல மணிநேரம்
பஸ் பயணத்திலும்
எதை எதையோ
தேவைக்கில்லாமல் பேசி
தவம் கிடந்த
அந்த வார்த்தை
வராதா என்று

உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகளில்
எப்போதாவது
முணுமுணுப்பாய் என்று

இன்னும் எனக்கு
அந்த சந்தேகம்
நான் காத்திருப்பது
காதலுக்காகவா
காதல்
வார்த்தைகளுக்காகவா

ஆனாலும்
உதடுகளின் உச்சரிப்பில்
உயிர்வாழ்கிறேன்

நன்றி மது
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு