Pages

Sunday, April 25, 2010

எழுத்துக்களின் ஆசிர்வாதம் அப்பாவுக்கு

தோள் மீது வளர்ந்தபோதும்
உன்
தோள்கொண்டு வளர்ந்தபோதும்
என்னோடு ஒன்றாக வளர்ந்தது
உங்கள் பாசம்

உன் உடற்பொலிவில்
ஒருசொட்டுக் குறைவு
என்றாலும்
என் உயிர்த்துடிப்பின்
இடைவெளி கூடுகிறது
தந்தையே....

ஒவ்வொரு இருமலுக்கும்
உன் அவஸ்த்தைகள்
என் விலா
எலும்புகளைத்தானே
நோகடிக்கிறது

இருமலின் எச்சிலில்
இரத்தம் வருவதாய்
சொல்லுகிறீர்கள்
உண்மையில்
இரத்தக்கசிவு
என்நெஞ்சிலிருந்து
நிமிருங்கள் தந்தையே
நான் உங்களோடு....

எதையும் தாங்கும் இதயம்
என்னிடம்- இப்போது
உங்கள் கவலைகளால்
என்
தைரியத்தின் வேர்களுக்கு
தைரியம் இல்லை

நடுநிசி கடந்தாலும்
ஒவ்வொரு இரவும்
என் நித்திரைக்குப் பின்னே
உங்கள் உறக்கம்
இன்று இருவரும்
தூக்கம்கொள்ளவில்லை
இருமிக்கொண்ட காய்ச்சலால்.....

தைரியம் ஊட்டி வளர்த்த
தந்தையே
இப்போது தைரியமாய் இருங்கள்
நாளைய விடியல்
நமக்காக உதிக்கும்
கவலைகளால் துருப்பட்டு
கலாங்காதிருங்கள்
உங்கள்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள் எப்போதும்
என் வேர்வைகளும்
பேனை பிடிக்கும்
விரல்களும்...

நீங்கள் எழுதிய
கடைசி எழுத்து நான்
என் ஒவ்வொரு எழுத்தின்
முதல்ரசிகன் நீங்கள்
இலேசாக இருங்கள்
எல்லோரினதும் ஆசிர்வாதம்
கொணர்கிறேன்
எழுத்துக்களாலே.......

Wednesday, April 21, 2010

உண்மையின் வேர்கள்

எத்தனையோ தடவைகள்
எதை எதையோ
எழுத நினைத்த போதும்...

எப்படியோ
சொல்ல வேண்டும் என்று
முணுமுணுத்தபோதும்...

காலைச் சுண்டி இழுத்து
கையைப்பிடித்து
தலைமேல் எறி
நெஞ்சு மேல் படர்ந்து
ஆழ ஊடுருவி
மனசு எங்கே
எண்டுணர்ந்து
துருதுருத்து
ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து....

Monday, April 19, 2010

கடவுள் எங்கே .....பிள்ளைய பாருங்க..

ஒரு சமூகம் அபிவிருத்தி காணவேண்டுமெனில் முதலில் பிள்ளைகள் அதாவது சிறுவர்களின் கல்வி விருத்தியடைய வேண்டும்.
ஒரு பிள்ளை தனது ஆரம்பக்கல்வியை தனது ஐந்து,ஆறு,ஏழு,எட்டு வயதுகளிலாவது மேற்கொள்ளவில்லையாயின் தனது வாழ்க்கையின் கல்விகற்றலின் பெருமான்மையை இழக்கநேரிடுகிறது. அதாவது படிப்பின் மீது வெறுப்புக்கொண்டு எனக்கு படிக்க முடியாது என்ற நிலையை இது தோற்றுவிக்கின்றது. இதன்பின் இதெ பிள்ளை தனது 20-25 ஆவது வயதுகளில் திருமணம் முடித்து தான் தாயாகும் போதுதான் தான் இழந்த அல்லது தன்னால் முடியாமல் போன கல்வியை தனது பிள்ளைக்காவது ஊட்டவேண்டும் என்ற எண்ணம் 25 வருடங்களின் அந்தப்பிள்ளைக்குத் தோன்றும். இதனால் ஒரு பரம்பரை கல்வியில் இருந்து நழுவுகிறது. அடுத்த பரம்பரையிலாவது .....என்று மனசுக்குள் நினைத்துக்கொள்கிறது.. இதனால் இப்பேர்ப்பட்ட கல்வி வீழ்ச்சியினால் நாம் அல்லது நமது சமூகம் கல்வி வளர்ச்சியில் பின்னடைவை நோக்கியிருக்கிறோம்.
இதெற்கெல்லாம் ஆயிரம் காரணம் கூறுவோம். எங்களுக்கு இந்த வசதி கிடைக்கல்ல, போர், வாய்ப்புக்களும் வசதிபடைத்தவர்களுக்கு, வறுமை, ....என்றெல்லாம் அடுக்கிக்கொண்டுபோவோம். ஆனால் நமது முயற்சியில் நாம் பின்னுக்கு நிற்கிறோம் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்று.
இலவசக்கல்வி முறைமை இலங்கையில் இருப்பதால் இக்கல்வியினை பெற்றுக்கொள்ள நமது சமூகம் பின்னடையவேண்டிய நிலைமை உருவாகின்றது என்பது மனவேதனைக்குரிய விடயம்.
இதற்கு நமது பெற்றோரின் வாழ்வாதார பண்பு அதாவது தொழில் முயற்சி சற்றுக்குறைவாக இருப்பதனால் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் பல சிக்கல்களும் கஸ்டங்களையும் எதிர்நோக்குவது தவிர்க்கமுடியாததொன்று. இதற்காக சிறுவர்களின் கல்வி விருத்திக்கு உதவுவது அச்சிறுவர்களின் சமூகத்தின் தலையாய கடமை.
இங்க பாருங்க இரு சிறுவர்கள் நமது ஊரின் குடியிருப்புக்கு பாடசாலை விட்டுச்செல்லும் காட்சி. இவர்களின் கால்களில் வறுமையைப் பாருங்கள் புன்னகையில் என்ன தெரிகிறது என்று கடைசி வரிகளில் சொல்லியிருக்கிறேன்

எங்களால் எல்லோருக்கும் உதவிக்கொள்ள முடியாவிட்டாலும் முடிந்தவரை கல்வியில் ஆர்வமுள்ள முயற்சியுள்ள பிள்ளைகளுக்காவது உதவிக்கொண்டிருப்பமேயானால் அச்சமூகத்தின் விருத்திக்கு வித்திடுகிறதாக இருக்கும்.
"சிறுவர்களின் கல்வி விருத்தியில் கடவுளைக்காணாம்" என்பதை இச்செயற்பாட்டை நீங்களே செயல்ப்படுத்தும் பொழுது உணரலாம் சகோதரர்களே!!!
நமது வீணாண செலவுகளையாவது குறைத்துக்கொண்டு மற்றவர்களின்(சிறுவர்களின்) படிப்புக்காக உதவும் எண்ணத்தை வளர்க்கலாம். இன்று நமது கண்ணில்படும் பிள்ளைகள் படிக்க முடியாமல் போனால் அதற்கான காரணத்தைக் கேட்டுப்பாருங்கள் மனது அவஸ்த்தைப்படும் அதில் தகுந்த காரணங்களில் சிலவற்றையாவது போக்கிக்கொண்டு பிள்ளைகளின் கல்விக்கு உதவும் மனப்பாங்கை வளருங்கள் இதை மற்றவுர்களுக்கும் அறிமுகப்படுத்தி மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள் சகோதரர்களே!!!
நாளைய விருட்சங்களாக சிறுவர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களிகளின் கல்விச் சூழல் வெற்றிகரமாக அமையவேண்டும். ஏனெனில் சிறுவர்கள் நாளைய நமது தேசத்தின் தூண்கள் அவர்களாலேயே நமது சமூகம் கட்டியெழுப்பப்படும்.
கடவுள் எங்கே என்று கேட்டுக்கொள்வீர்கள் என்றால் கஸ்டப்படும் அழுதுகொண்டிருக்கும் பிள்ளைகளின் சிரிப்பிலும் அவர்களின் கல்விச் சிறப்பிலும் இருக்கும் தேடுங்கள் பாருங்கள் தெரிகிறாரா கடவுள்!!!
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு